வரவேற்பு பேனர்; கவர்னர் கிரண்பெடி கண்டிப்பு

சமூக நலத்துறையில் தன்னை வரவேற்று பேனர் வைத்து இருந்ததற்கு கவர்னர் கிரண்பெடி கண்டிப்பு தெரிவித்ததுடன் அவரே அதை அப்புறப்படுத்தினார்.

Update: 2018-12-07 23:00 GMT
புதுச்சேரி,

புதுவை கவர்னர் கிரண்பெடி நாள்தோறும் அரசு அலுவலகங்களில் ஆய்வு நடத்தி வருகிறார். அந்த வகையில் நேற்று அவர் சாரதாம்பாள் நகரில் உள்ள சமூக நலத்துறை அலுவலகத்தில் ஆய்வு நடத்த வருவதாக தெரிவித்திருந்தார். இதையொட்டி சமூக நலத்துறை அதிகாரிகள் அவரை வரவேற்று பேனர் வைத்திருந்தனர். நேற்று ஆய்வுக்கு சென்றபோது கவர்னர் கிரண்பெடி அதைப் பார்த்து அதிர்ச்சியடைந்தார்.

உடனே வரவேற்பு பேனர் வைத்த அதிகாரிகளை கவர்னர் கிரண்பெடி கண்டித்தார். இதன்பின் அவராகவே அந்த பேனரை அவிழ்த்து அகற்றினார். பொதுமக்களின் பணத்தை இதுபோன்று வீணாக்கக்கூடாது என்று அதிகாரிகளிடம் அதிருப்தி தெரிவித்தார். மேலும் துறை அலுவலகத்தில் முதியவர்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு தேவையான உதவிகள் செய்யும் வகையில் தனிப்பிரிவு செயல்பட அறிவுறுத்தினார். துறை தொடர்பான சட்ட விதிமுறைகளை கற்றுக்கொள்ளவும் அதிகாரிகளை அவர் அறிவுறுத்தினார். துறை அதிகாரிகள் குடும்ப நல நீதிமன்றம் மற்றும் ஆலோசனை மையங்களுக்கு சென்று பார்வையிடுமாறும் கவர்னர் கிரண்பெடி ஆலோசனை தெரிவித்தார்.

இந்த நிலையில் நேற்று இரவு புதுச்சேரி நகராட்சி ஆணையர் ஆதர்ஷ் மேற்பார்வையில் நகர பகுதியில் அனுமதியின்றி வைக்கப்பட்டு இருந்த பேனர்களை நகராட்சி அதிகாரிகள், ஊழியர்கள் அகற்றினர்.

மேலும் செய்திகள்