ஆற்றில் மீன்பிடிக்க சென்றபோது சேற்றில் சிக்கி மீனவர் சாவு

சென்னை எண்ணூரில் ஆற்றில் மீன்பிடிக்க சென்ற மீனவர் சேற்றில் சிக்கி உயிரிழந்தார்.

Update: 2018-12-07 23:19 GMT
திருவொற்றியூர்,

சென்னை எண்ணூர் காட்டுக்குப்பம் பகுதியை சேர்ந்தவர் செல்வகுமார் (வயது 40). மீனவரான இவர் நேற்று முன்தினம் இரவு சக மீனவர்களுடன் பைபர் படகில் கொசஸ்தலை ஆற்றின் கழிமுக பகுதியில் மீன் பிடிக்க சென்றார்.

உடல்நலம் பாதிக்கப்பட்டு இருந்ததால் செல்வகுமார் மீன்பிடிக்க செல்லாமல் படகிலேயே இருந்தார். இதையடுத்து மீன்பிடித்து விட்டு மற்ற மீனவர்கள் படகுக்கு வந்தனர். அப்போது அங்கு செல்வகுமாரை காணவில்லை.

அவர் வீட்டிற்கு சென்று இருப்பார் என நினைத்து அனைவரும் கரைக்கு திரும்பினர். வீட்டுக்கு சென்று பார்த்தபோது அங்கு அவரை காணவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த மீனவர்கள் மீண்டும் மீன்பிடிக்க சென்ற இடத்துக்கு சென்று அவரை தேடினர்.

அப்போது அங்கு செல்வகுமார் சேற்றில் சிக்கி பிணமாக கிடந்தார். அவரது உடலை மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். இதுபற்றி தகவல் அறிந்ததும் எண்ணூர் போலீசார் விரைந்து சென்று செல்வகுமார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்