போளூரில் வெவ்வேறு விபத்துகளில் 3 பேர் பலி

போளூரில் வெவ்வேறு விபத்துகளில் 3 பேர் பரிதாபமாக இறந்தனர்.

Update: 2018-12-08 22:30 GMT
போளூர், 

போளூரை அடுத்த பெரிய கல்லந்தல் கிராமத்தை சேர்ந்தவர் சிவக்குமார், விவசாயி. இவர் நேற்று முன்தினம் போளூருக்கு தனது மனைவி பூமல்லியுடன் (வயது 33) மோட்டார் சைக்கிளில் வந்தார். அப்போது திருவண்ணாமலையில் இருந்து வேலூர் நோக்கி சென்ற கார் மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

இதில் படுகாயம் அடைந்த சிவக்குமார், பூமல்லியை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக போளூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின்னர் அவர்கள் மேல்சிகிச்சைக்காக வேலூர் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு பூமல்லி சிகிச்சை பலனின்றி நேற்று பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து போளூர் சப்-இன்ஸ்பெக்டர் ரவி வழக்குப்பதிவு செய்து கார் டிரைவர் ஆந்திர மாநிலம் நெல்லூரை சேர்ந்த பிரவின்குமார் (24) என்பவரை கைது செய்தார்.

போளூரை அடுத்த புதுப்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் கண்ணன் (70), கல் உடைக்கும் தொழிலாளி. சம்பவத்தன்று அவர் அந்த பகுதியில் உள்ள சாலையை கடக்கும் போது அடையாளம் தெரியாத வாகனம் அவர் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இதுகுறித்து போளூர் சப்-இன்ஸ்பெக்டர் அருள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

போளூரை அடுத்த காமாட்சிபுரம் அருந்ததியர் காலனியை சேர்ந்தவர் பாண்டுரங்கன், விவசாயி. கடந்த 1-ந் தேதி அவரது மனைவி சந்திரா (50) உடல்நிலை சரியில்லாமல் இருந்தார். சந்திராவை போளூரில் உள்ள மருத்துவமனைக்கு அவர் மோட்டார் சைக்கிளில் அழைத்து சென்றார். வழியில் திடீரென சந்திரா மோட்டார் சைக்கிளில் இருந்து மயங்கி கீழே விழுந்தார். இதில் படுகாயம் அடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து போளூர் சப்-இன்ஸ்பெக்டர் விநாயகம் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

மேலும் செய்திகள்