முதல்-அமைச்சரை பற்றி அவதூறு: முன்னாள் மத்திய மந்திரி ஆ.ராசா மீது வழக்கு

பெரம்பலூரில் தமிழக முதல்- அமைச்சரை பற்றி அவதூறாக பேசியதாக முன்னாள் மத்திய மந்திரி ஆ.ராசா மீது 4 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

Update: 2018-12-08 23:00 GMT
பெரம்பலூர்,

குட்கா ஊழல் தொடர்பாக தமிழக அரசை கண்டித்து பெரம்பலூர் மாவட்ட தி.மு.க. சார்பில் கடந்த செப்டம்பர் மாதம் 18-ந் தேதி பெரம்பலூர் புதிய பஸ் நிலையத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் தி.மு.க. கொள்கை பரப்பு செயலாளரும், முன்னாள் மத்திய மந்திரியுமான ஆ.ராசா கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

அப்போது ராசா தமிழக அரசையும், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் தமிழக அமைச்சர்களை பற்றியும் அவதூறாக பேசினாராம். எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பெரம்பலூர் டவுன் போலீஸ் நிலையத்தில் பெரம்பலூர் மாவட்ட அ.தி.மு.க. வக்கீல் அணியை சேர்ந்த வக்கீல் துரை.பெரியசாமி நேற்று முன்தினம் இரவு புகார் கொடுத்தார்.

அதன்பேரில் பெரம்பலூர் போலீசார் முன்னாள் மத்திய மந்திரி ராசா மீது 503, 504, 505 (1பி), 506(1) ஆகிய 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் இந்த புகார் தொடர்பாக போலீசார் விசாரணையை தொடங்கி உள்ளனர். ஆர்ப்பாட்டத்தில் ராசா பேசிய ஆடியோ மற்றும் வீடியோ பதிவுகளின் ஆதாரங்களை திரட்ட முடிவு செய்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர். முன்னாள் மத்திய மந்திரி ராசா மீது 4 பிரிவுகளின் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்