கஜா புயலால் பருத்தி செடிகள் நாசம்: விஷம் குடித்த விவசாயி சாவு

கஜா புயலின் போது பருத்தி செடிகள் நாசமானதால் மனமுடைந்து விஷம் குடித்த விவசாயி சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்தார்.

Update: 2018-12-08 23:00 GMT
கீழப்பழுவூர்,

அரியலூர் மாவட்டம் கீழ எசனை கிராமத்தை சேர்ந்தவர் ராமர்(வயது 40). விவசாயியான இவர் தனக்கு சொந்தமான ஒரு ஏக்கர் நிலத்தில் விவசாயம் செய்து பிழைத்து வந்தார். இந்நிலையில் ராமர் வட்டிக்கு கடன் வாங்கி அவரது வயலில் பருத்தி பயிரிட்டிருந்தார். கடந்த மாதம் கஜா புயலின் போது பெய்த கனமழையால் நிலத்தில் பயிரிடப்பட்டு இருந்த பருத்தி செடிகள் நீரில் சாய்ந்து நாசமாயின. மறுநாள் வழக்கம்போல் வயலுக்கு சென்ற ராமர் பருத்தி செடிகளை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

பின்னர் மனமுடைந்து தனது நிலத்திலேயே பயிருக்கு அடிக்கக்கூடிய பூச்சி மருந்தை (விஷம்) குடித்தார். பின்னர் அவர் வீட்டிற்கு வந்து தனது மனைவியிடம் பயிரிடப்பட்டு இருந்த பருத்தி செடிகள் நாசமானதால் நான் (ராமர்) விஷம் குடித்துவிட்டேன் என்று கூறி அழுதுள்ளார். இதையடுத்து அவரது மனைவி மஞ்சுளா அக்கம், பக்கத்தினர் உதவியுடன் ராமரை மீட்டு சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அங்கு கடந்த 15 நாட்களுக்கு மேலாக சிகிச்சை பெற்று வந்த ராமர் நேற்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து கீழப்பழுவூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். உயிரிழந்த ராமருக்கு மாலினி(8) என்ற மகளும், கபிலன்(3) என்ற மகனும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்