திருச்சி அருகே ஆற்றில் குளிக்க சென்ற 15 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் 4 பேர் கும்பலுக்கு வலைவீச்சு

திருச்சி அருகே ஆற்றில் குளிக்க சென்ற 15 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டாள். இதுதொடர்பாக 4 பேர் கொண்ட கும்பலை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.

Update: 2018-12-08 22:15 GMT
திருச்சி,

திருச்சி ஸ்ரீரங்கத்தை சேர்ந்த 15 வயது சிறுமியும், அவரது சக தோழியுமான 13 வயது சிறுமியும் நேற்று மாலை யாத்ரிநிவாஸ் அருகே உள்ள கொள்ளிடம் கரையில் ஆற்றில் குளிக்க சென்றனர். அப்போது அங்கு முட்புதர் செடி பகுதிகளில் 4 பேர் கும்பல் மது அருந்தி கொண்டிருந்தது. சிறுமிகளை பார்த்த அந்த கும்பல் அவர்களை பிடித்து இழுத்து பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றது. இதில் 13 வயது சிறுமி அங்கிருந்து தப்பி ஓடினாள். 15 வயது சிறுமி அந்த கும்பலிடம் மாட்டிக்கொண்டாள். அந்த சிறுமியை 25 வயது மதிக்கத்தக்க 2 வாலிபர்கள் பாலியல் பலாத்காரம் செய்தனர். அந்த நேரத்தில் மற்ற 2 பேர் காவலுக்கு நின்றனர். 3-வதாக ஒரு நபர் பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றிருக்கிறார்.

அப்போது தப்பிஓடிய 13 வயது சிறுமி கூறியதன்பேரில் அந்த பகுதி பொதுமக்கள் சிலர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். பொதுமக்கள் வருவதை கண்டதும் அந்த கும்பல் அங்கிருந்து தப்பி ஓடியது. பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட 15 வயது சிறுமியை பொதுமக்கள் மீட்டு ஸ்ரீரங்கம் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் ஸ்ரீரங்கம் போலீஸ் உதவி கமிஷனர் ராமச்சந்திரன், இன்ஸ்பெக்டர் உமாசங்கர் மற்றும் போலீசார் விசாரணை நடத்தினர். பாதிக்கப்பட்ட 15 வயது சிறுமியை மீட்டு சிகிச்சைக்காக ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாள்.

இந்த சம்பவம் தொடர்பாக ஸ்ரீரங்கம் அனைத்து மகளிர் போலீஸ் நிலைய போலீசாரை விசாரணை நடத்த உதவி கமிஷனர் உத்தரவிட்டார். இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) மும்தாஜ் பேகம் மற்றும் பெண் போலீசார் திருச்சி அரசு மருத்துவமனைக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட 15 வயது சிறுமியிடம் விசாரித்த போது அவள் அந்த கும்பலில் 2 பேரின் முகவரியையும், பெயரையும் கூறினாள். அந்த சிறுமி கூறியது அதே பகுதியை சேர்ந்த மகேஷ் (28), பாலு (25) என்பது தெரியவந்தது. மற்ற 2 பேர் யார் என்றும் தெரிய வில்லை. அவள் தெரிவித்த முகவரிகளை வைத்து போலீசார் விசாரணை நடத்தினர். இதற்கிடையில் 4 பேரும் தப்பி ஓடியதால் அவர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

பாதிக்கப்பட்ட சிறுமியுடன் வந்த 13 வயது சிறுமியிடம் போலீசார் விசாரணை நடத்திய போது, அவர் முன்னுக்கு பின் முரணாக தகவல்களை தெரிவித்ததாக கூறப்படுகிறது. 15 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் திருச்சியில் நேற்று இரவு பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்