வீரகனூரில் ரூ.100 கோடியில் புதிய திட்டப்பணிகள் 14-ந் தேதி எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைக்கிறார்

வீரகனூரில் ரூ.100 கோடியில் புதிய திட்டப்பணிகளை வருகிற 14-ந் தேதி முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைக்கிறார்.

Update: 2018-12-08 22:30 GMT
தலைவாசல்,

தலைவாசல் அருகே வீரகனூர் சந்தைபேட்டையில் வருகிற 14-ந் தேதி மாலை 3 மணிக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற உள்ளது. இந்த விழாவில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார்.

இதையொட்டி விழா பந்தல் அமைக்க வீரகனூர் சந்தைபேட்டையில் தேர்வு செய்யப்பட்ட இடத்தை மாவட்ட கலெக்டர் ரோகிணி நேற்று பார்வையிட்டு ஆய்வு நடத்தினார். அப்போது கூட்டுறவு வங்கி தலைவர் இளங்கோவன், மருதமுத்து எம்.எல்.ஏ. ஆகியோர் உடன் இருந்தனர்.

அப்போது மாவட்ட திட்ட இயக்குனர் அருள்ஜோதி அரசன், ஆத்தூர் உதவி கலெக்டர் செல்வன், கெங்கவல்லி தாசில்தார் சுந்தர்ராஜன், வீரகனூர் பேரூராட்சி செயல் அலுவலர் சண்முகசுந்தரி, தலைவாசல் ஒன்றிய ஆணையாளர் வெங்கட்ரமணன், வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜேந்திரன் மற்றும் அதிகாரிகள் விழா குறித்தும், அதற்கு செய்யப்படும் ஏற்பாடுகள் குறித்தும் விளக்கம் அளித்தனர். ஆய்வில் தலைவாசல் ஒன்றிய அ.தி.மு.க. செயலாளர் ராமசாமி, வீரகனூர் நகர செயலாளர் ராஜேந்திரன், வீரகனூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி தலைவர் சிவகுமார், தலைவாசல் ஒன்றிய குழு முன்னாள் தலைவர் இளங்கோவன், பேரூராட்சி முன்னாள் தலைவர் முத்துலிங்கம், முன்னாள் துணைத்தலைவர் ஜெயராமன், கெங்கவல்லி, ஒன்றிய செயலாளர் ராஜா மற்றும் மற்றும் பல்வேறு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

ஆய்வுக்கு பின்னர் கலெக்டர் ரோகிணி நிருபர்களிடம் கூறுகையில், வருகிற 14-ந் தேதி வீரகனூர் சந்தைபேட்டையில் அரசு விழா நடைபெறுகிறது. ரூ.100 கோடி மதிப்பில் புதிய திட்டப்பணிகளை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைக்கிறார். மேலும் 10 ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகிறது. விழாவுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது என்றார்.

மேலும் செய்திகள்