கன்னிவாடி அருகே வனப்பகுதியில் காயங்களுடன் இறந்து கிடந்த சிறுத்தை

கன்னிவாடி அருகே வனப்பகுதியில் காயங்களுடன் சிறுத்தை இறந்து கிடந்தது.

Update: 2018-12-08 22:45 GMT
கன்னிவாடி,

திண்டுக்கல் மாவட்டம் கன்னிவாடியை அடுத்த பண்ணைபட்டி அருகே கோம்பை வனப்பகுதியை ஒட்டி முத்துப்பாண்டி கோவில் உள்ளது. இதையொட்டி ஏராளமான விவசாய நிலங்களும் உள்ளன. இந்த நிலையில் நேற்று காலை, அந்த பகுதியில் உள்ள தோட்டங்களுக்கு விவசாய தொழிலாளர்கள் வேலைக்கு சென்றனர்.

அப்போது முத்துப்பாண்டி கோவில் அருகே வனப்பகுதிக்குள் சிறுத்தை ஒன்று இறந்து கிடந்தது. அந்த சிறுத்தையின் உடல் முழுவதும் காயங்கள்இருந்தன.இதுகுறித்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் மாவட்ட வன அலுவலர் வித்யா தலைமையில் வனச்சரகர் மனோஜ், வனவர் தண்டபாணி மற்றும் வனத்துறை ஊழியர்கள் அங்கு விரைந்தனர்.

பின்னர் சிறுத்தை இறந்ததற்கான காரணம் குறித்து வனத்துறையினர் விசாரணை நடத்தினர். இதுகுறித்து அவர்கள் கூறும்போது, இறந்து கிடந்த சிறுத்தைக்கு 3 வயது இருக்கும். இது, பெண் சிறுத்தை ஆகும். சிறுத்தையின் உடலில் காயங்கள் உள்ளன. வேறு ஒரு விலங்கு கடித்ததில் காயங்கள் ஏற்பட்டுள்ளன. அதாவது, இரவுநேரத்தில் 2 சிறுத்தைகளுக்கு இடையே ஏற்பட்ட மோதலில், இந்த சிறுத்தை இறந்திருக்கலாம் என்றனர்.

இதற்கிடையே கால்நடை மருத்துவர் பாலக்குமார் அங்கு வரவழைக்கப்பட்டார். பின்னர் சிறுத்தையின் உடல் பரிசோதனை செய்யப்பட்டு, அங்கேயே புதைக்கப்பட்டது.


மேலும் செய்திகள்