விக்கிரமசிங்கபுரம் அருகே தோட்டத்தில் புகுந்து காட்டு யானைகள் அட்டகாசம்

விக்கிரமசிங்கபுரம் அருகே தோட்டத்தில் புகுந்து காட்டு யானைகள் அட்டகாசம் செய்துள்ளன.

Update: 2018-12-09 22:30 GMT
விக்கிரமசிங்கபுரம், 

நெல்லை மாவட்டம் விக்கிரமசிங்கபுரம் அருகே மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அனவன்குடியிருப்பு கிராமம் உள்ளது. அங்கு யானை ஒன்று குட்டியுடன் சுற்றி திரிந்து வருவது விவசாயிகளிடம் கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்தநிலையில் அங்கு சுப்பிரமணியன் என்பவருக்கு சொந்தமான தோட்டத்தில் நேற்று அதிகாலை காட்டு யானைகள் புகுந்துள்ளன. அங்குள்ள தென்னை மரங்களை வேரோடு சாய்த்துவிட்டு சென்றுவிட்டன.

இதுகுறித்து பாபநாசம் வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் ரேஞ்சர் பாரத் அறிவுரைப்படி வனக்காப்பாளர்கள் வெங்கடசாமி, கணேசமூர்த்தி, வனக்காவலர் செல்வன் ஆகியோர் சம்பவ இடத்துக்கு சென்று பார்வையிட்டனர். அங்கு யானைகள் குட்டி களுடன் சென்றதற்கான கால்தடங்கள் பதிவாகியுள்ளன. மேலும் யானைகளை காட்டுக்குள் விரட்டும் முயற்சியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர். இருந்த போதிலும் விளைநிலங்களுக்குள் காட்டு யானைகள் வந்து விவசாய பயிர்களை அழித்து விடுமோ என்ற அச்சத்தில் அங்குள்ள விவசாயிகள் இரவு பகலாக விளைநிலங்களில் நின்று விவசாய பயிர்களை பாதுகாத்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்