நாசரேத் அருகே: ரெயில் மோதி மூதாட்டி பலி - வயலுக்கு சென்றபோது பரிதாபம்

நாசரேத் அருகே வயலுக்கு சென்ற மூதாட்டி தண்டவாளத்தை கடக்க முயன்றபோது ரெயில் மோதி பரிதாபமாக பலியானார்.

Update: 2018-12-10 22:00 GMT
நாசரேத்,

நாசரேத்தை அடுத்த முதலைமொழி கிராமத்தைச் சேர்ந்தவர் ஆறுமுகம். இவருடைய மனைவி புஷ்பம் (வயது 75). இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். இவர்களுக்கு திருமணமாகி விட்டது. ஆறுமுகம் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். புஷ்பம் தன்னுடைய மகன்களுடன் வசித்து வந்தார்.

முதுமையின் காரணமாக, புஷ்பத்துக்கு காது கேட்கும் திறன் குறைந்தது. அவர் நேற்று காலை 8 மணி அளவில் அப்பகுதியில் உள்ள தனது வயலுக்கு புறப்பட்டு சென்றார். அங்குள்ள ரெயில்வே தண்டவாளத்தை கடந்துதான், புஷ்பம் தனது வயலுக்கு செல்ல வேண்டும்.

அவர் தண்டவாளத்தை கடக்க முயன்றபோது, நெல்லையில் இருந்து திருச்செந்தூருக்கு சென்ற பயணிகள் ரெயில் எதிர்பாராதவிதமாக அவர் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து ரெயில் என்ஜின் டிரைவர், நாசரேத் ரெயில் நிலையத்தில் தகவல் தெரிவித்தார்.

அங்கிருந்து நெல்லை ரெயில்வே போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இதை தொடர்ந்து ரெயில்வே போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். புஷ்பத்தின் உடலைக் கைப்பற்றி பரிசோதனைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

மேலும் செய்திகள்