கன்னியாகுமரியில் ஜெயலலிதாவுக்கு மணிமண்டபம் அகஸ்தீஸ்வரம் ஒன்றிய அ.தி.மு.க. கூட்டத்தில் தீர்மானம்

கன்னியாகுமரியில் ஜெயலலிதாவுக்கு மணிமண்டபம் அமைக்க வேண்டும் என்று அகஸ்தீஸ்வரம் ஒன்றிய அ.தி.மு.க. செயல்வீரர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Update: 2018-12-10 22:30 GMT
கன்னியாகுமரி,

அகஸ்தீஸ்வரம் ஒன்றிய அ.தி.மு.க. செயல்வீரர்கள் கூட்டம் சுசீந்திரத்தில் நடந்தது. கூட்டத்துக்கு அகஸ்தீஸ்வரம் ஒன்றிய செயலாளர் அழகேசன் தலைமை தாங்கினார். அவைத்தலைவர் தம்பி தங்கம் வரவேற்று பேசினார். துணை செயலாளர் முத்துசாமி, இணை செயலாளர்கள் ஏசுத்தங்கம், பாக்கியா பாய், பொருளாளர் கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ, தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய்சுந்தரம், கிழக்கு மாவட்ட செயலாளர் எஸ்.ஏ.அசோகன் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

அமைச்சர் கடம்பூர் ராஜூ பேசுகையில், “குமரி மாவட்டதை அ.தி.மு.க.வின் கோட்டை என்பதை நிரூபிக்க வேண்டும். வருகிற நாடாளுமன்ற தேர்தலில் கன்னியாகுமரி தொகுதியில் வெற்றி பெற அனைவரும் பாடுபட வேண்டும்“ என்றார்.

சுற்றுலா தலமான கன்னியாகுமரியில் மறைந்த முதல்- அமைச்சர் ஜெயலலிதாவுக்கு மணிமண்டபம் அமைக்க வேண்டும் என்பது உள்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில், மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞர் அணி செயலாளர் சுந்தர்சிங், பேரூர் அ.தி.மு.க செயலாளர்கள் சந்திரசேகர், வின்ஸ்டன், தாமரை தினேஷ், கைலாசம் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் சுசீந்திரம் பேரூர் செயலாளர் குமார் நன்றி கூறினார்.

மேலும் செய்திகள்