விழுப்புரத்தில் துணிகரம்: ராணுவ வீரர் வீட்டில் ரூ.3 லட்சம் நகை-பணம் கொள்ளை - மர்மநபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு

விழுப்புரத்தில் ராணுவ வீரர் வீட்டின் கதவு பூட்டை உடைத்து ரூ.3 லட்சம் நகை- பணத்தை கொள்ளையடித்துச்சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். பட்டப்பகலில் நடந்த இந்த துணிகர சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-

Update: 2018-12-10 22:00 GMT
விழுப்புரம், 

விழுப்புரம் மகாராஜபுரம் வீட்டுவசதி வாரிய குடியிருப்பில் வசித்து வருபவர் ஹெண்ட்ரியாஹமேஷ் (வயது 40). இவர் விசாகப்பட்டினத்தில் ராணுவ வீரராக உள்ளார். இவருடைய மனைவி சாந்தி (38). இவர் விழுப்புரத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். இவர்களுடைய மகனும், மகளும் அதே பள்ளியில் படித்து வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று காலை வழக்கம்போல் சாந்தி தனது வீட்டை பூட்டிவிட்டு குழந்தைகளுடன் பள்ளிக்கு சென்றார். பின்னர் மாலை 4 மணியளவில் பள்ளி முடிந்ததும் 3 பேரும் வீட்டிற்கு வந்தனர்.

அப்போது வீட்டின் முன்பக்க கதவு பூட்டு உடைக்கப்பட்டிருந்ததை கண்டு 3 பேரும் திடுக்கிட்டனர். உடனே வீட்டுக்குள் சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு கிடந்தது. அதில் வைத்திருந்த 15 பவுன் நகை மற்றும் ரூ.5 ஆயிரம் ஆகியவற்றை காணாதது கண்டு சாந்தி அதிர்ச்சியடைந்தார்.

இதுகுறித்து அவர் விழுப்புரம் நகர போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். அதன் பேரில் துணை போலீஸ் சூப்பிரண்டு சங்கர், இன்ஸ்பெக்டர் ராபின்சன், சப்-இன்ஸ்பெக்டர் பிரபாகரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

விசாரணையில், சாந்தி வீட்டை பூட்டி விட்டு குழந்தைகளுடன் பள்ளிக்கு சென்றதை நோட்டமிட்ட மர்மநபர்கள், பட்டப்பகலிலேயே பூட்டை உடைத்து உள்ளே புகுந்து நகை- பணத்தை கொள்ளையடித்து விட்டு தப்பிச்சென்றிருப்பது தெரியவந்தது. கொள்ளை போன நகையின் மதிப்பு ரூ.3 லட்சமாகும்.

இதற்கிடையே கைரேகை நிபுணர்கள் வந்து, கொள்ளை நடந்த வீட்டில் பதிந்திருந்த மர்மநபர்களின் கைரேகைகள் மற்றும் தடயங்களை சேகரித்து சென்றனர். இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். பட்டப்பகலில் நடந்த இந்த கொள்ளை சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் செய்திகள்