இறந்த மூதாட்டியின் உடலை ஏரி வழியாக சுடுகாட்டிற்கு கொண்டு சென்ற உறவினர்கள் மாற்றுப்பாதை அமைக்க கோரிக்கை

ஜெயங்கொண்டம் அருகே இறந்த மூதாட்டியின் உடலை ஏரி வழியாக சுடுகாட்டிற்கு கொண்டு சென்ற உறவினர்கள் மாற்றுப்பாதை அமைக்க பொதுமக்கள் கோரிக்கை.

Update: 2018-12-11 22:30 GMT
ஜெயங்கொண்டம்,

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள கழுவந்தோண்டி கிராமத்தை சேர்ந்தவர் சிவலிங்கம் மனைவி ருக்மணி(வயது 65). உடல்நிலை சரியில்லாமல் இருந்த ருக்மணி நேற்று இறந்தார். இதையடுத்து அவருடைய உடலை அடக்கம் செய்வதற்காக நேற்று மாலை கழுவந்தோண்டி நைனேரி அருகே உள்ள சுடுகாட்டுப்பகுதிக்கு உறவினர்கள் மற்றும் அப்பகுதி பொதுமக்கள் கொண்டு சென்றனர். அப்போது நைனேரியில் மார்பளவு தண்ணீர் இருந்தது. சுடுகாட்டிற்கு செல்ல வேறு பாதை இல்லாததால், ருக்மணியின் உடலை சுமந்து சென்ற உறவினர்கள் உள்ளிட்டோர் தண்ணீரில் இறங்கி நடந்து ஏரியை கடந்து சுடுகாட்டிற்கு சென்றனர். அங்கு ருக்மணியின் உடல் அடக்கம் செய்யப்பட்டது. இது குறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், சுடுகாட்டிற்கு வேறு பாதை அமைத்து தரக்கோரி பலமுறை மாவட்ட நிர்வாகத்திடம் மனு அளித்தும், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. ஏரியில் தண்ணீர் நிரம்பியுள்ளதால் தற்போது கடல்போல் காட்சியளிக்கிறது. மழை பெய்து மேலும் தண்ணீர் அதிகரித்தால், ஏரியை கடந்து சுடுகாட்டிற்கு செல்ல முடியாத நிலை ஏற்படும். எனவே உடனடியாக மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து, சுடுகாட்டிற்கு மாற்றுப்பாதை அமைத்து தர வேண்டும், என்று கோரிக்கை விடுத்தனர். 

மேலும் செய்திகள்