கஜா புயலால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் பாரபட்சம் இன்றி நிவாரணம் வழங்கக்கோரி சாலை மறியல்

கஜா புயலால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் பாரபட்சம் இன்றி நிவாரணம் வழங்கக்கோரி திருவாரூர் அருகே பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2018-12-11 22:30 GMT
திருவாரூர்,

கஜா புயலால் திருவாரூர் மாவட்டத்தில் முத்துப்பேட்டை, திருத்துறைப்பூண்டி, மன்னார்குடி, கோட்டூர், திருவாரூர் ஆகிய பகுதிகள் பாதிக்கப்பட்டன. தற்போது பாதிப்பு குறித்த கணக்கெடுப்பு நடைபெற்று வருகிறது. இதில் கணக்கெடுப்பு முறையாக எடுக்கப்படவில்லை. தமிழக அரசு பாரபட்சமாக நிவாரணம் வழங்கி வருவதாக பாதிக்கப்பட்ட மக்கள் குற்றம்சாட்டி போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் திருவாரூர் அருகே உள்ள புலிவலத்தில் புயலால் பாதிக்கப்பட்ட கிராம மக்களுக்கு தமிழக அரசு சார்பில் நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. இதில் ஒரு பகுதியினருக்கு நிவாரண பொருட்கள் வழங்கி விட்டு பலருக்கும் வழங்கப்படவில்லை என தெரிகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள், பாரபட்சம் இன்றி நிவாரணம் வழங்கக் கோரி புலிவலம் பெருமாள் கோவில் அருகில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்திற்கு தி.மு.க. ஒன்றிய செயலாளர் தேவா தலைமை தாங்கினார். இதில் விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்டு கட்சிகள் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சியினர் மற்றும் கிராம மக்கள் 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு அனைவருக்கும் பாரபட்சம் இன்றி நிவாரணம் வழங்க வேண்டும் என கோஷங்கள் எழுப்பினர்.

இதுகுறித்து தகவல் அறிந்த திருவாரூர் தாலுகா போலீசார் மற்றும் வருவாய்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது நிவாரணம் அனைவருக்கும் வழங்கப்படும் என அதிகாரிகள் உறுதியளித்தனர். இதில் உடன்பாடு ஏற்பட்டதால் பொதுமக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த மறியலால் திருவாரூர்-திருத்துறைப்பூண்டி சாலையில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 

மேலும் செய்திகள்