இளநிலை பயிற்சி அலுவலர் தேர்வில் முறைகேடு நடந்ததாக வழக்கு; வேலைவாய்ப்பு துறை அதிகாரிகளுக்கு, ஐகோர்ட்டு நோட்டீஸ்

இளநிலை பயிற்சி அலுவலர் தேர்வில் முறைகேடு நடந்ததாக தொடர்ந்த வழக்கில் வேலைவாய்ப்பு துறை அதிகாரிகளுக்கு நோட்டீஸ் அனுப்ப மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

Update: 2018-12-11 22:45 GMT
மதுரை,

மதுரை ஜீவாநகரை சேர்ந்த மணிகண்டன், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-

நான் டிப்ளமோ மெக்கானிக்கல் என்ஜினீயரிங் படித்துள்ளேன். கடந்த 12.1.2016 அன்று அரசு தொழில் பயிற்சி மையத்தில் 329 இளநிலை பயிற்சி அலுவலர் காலி பணியிடங்களுக்கு தகுதியான நபர்கள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளதாக அறிவிப்பு வெளியானது. 150 மதிப்பெண்களுக்காக நடந்த எழுத்துத்தேர்வில் 98 மதிப்பெண் பெற்றேன். வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து 10 ஆண்டுகளோ, அதற்கு முன்னதாக பதிவு செய்தவர்களுக்கு 5 மதிப்பெண் நேர்முகத்தேர்வின்போது வழங்கப்படும் என்றும் அறிவிப்பில் கூறப்பட்டு இருந்தத. பின்னர் கடந்த அக்டோபர் மாதம் வேலைவாய்ப்பு துறை சார்பில் வெளியான அரசாணையில், விண்ணப்பதாரர்கள் தங்களது படிப்பை வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து 2011-ம் ஆண்டில் இருந்து புதுப்பிக்க தவறியவர்கள் சிறப்பு வாய்ப்பின் அடிப்படையில் புதுப்பித்து கொள்ளலாம் என்று கூறப்பட்டது. இது முற்றிலும் சட்டவிரோதமானது. என்னை போன்றவர்களுக்கு எதிரான அரசாணையாகும். கடந்த மாதம் நேர்முகத்தேர்வில் பங்கேற்றேன். இந்த பணிக்கு நான் தேர்வு செய்யப்படுவேன் என்று நம்பிக்கையுடன் இருந்தேன்.

இந்த பணிக்கு தேர்வானவர்கள் பட்டியலில் தகுதியான என்னை போன்றவர்கள் நிராகரிக்கப்பட்டு, தகுதியற்ற பலர் பெயர் இடம் பெற்றுள்ளது. அதிகாரிகளின் இந்த நடவடிக்கையானது, இளநிலை பயிற்சி அலுவலர் தேர்வில் முறைகேடு நடந்துள்ளதை காட்டுகிறது.

எனவே இந்த பணிக்கு தேர்வானவர்களின் பட்டியலை ரத்து செய்ய வேண்டும். அந்த பட்டியலில் உள்ளவர்களுக்கு பணி வழங்க தடை விதிக்க வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி ஆர்.சுப்பிரமணியன் முன்பு விசாரணைக்கு வந்தது.

முடிவில் இந்த வழக்கு குறித்து வேலைவாய்ப்பு துறை செயலாளர், இயக்குனர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிபதி உத்தரவிட்டார். விசாரணையை அடுத்த மாதம் 9-ந்தேதிக்கு ஒத்திவைத்தார்.

மேலும் செய்திகள்