பேராவூரணி அருகே பரபரப்பு: குடிநீர் தொட்டியை சுத்தம் செய்தவர்கள் மீது தாக்குதல் நடத்திய ஆபரேட்டர்

பேராவூரணி அருகே மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை சுத்தம் செய்தவர்கள் மீது ஆபரேட்டர் தாக்குதல் நடத்தியதாக கூறி கலங்கிய குடிநீருடன் போலீஸ் நிலையத்திற்கு பொது மக்கள் வந்து புகார் கொடுத்தனர். இந்த சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2018-12-11 22:45 GMT
பேராவூரணி,

தஞ்சை மாவட்டம் பேராவூரணியை அடுத்த காலகம் ஊராட்சி அஞ்சூரணிக்காடு கிராமத்தில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி மூலம் கிராம மக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த தொட்டி நீண்ட காலமாக சுத்தம் செய்யப்படாமல் உள்ளதாக தெரிகிறது.

இந்த தொட்டியில் இருந்து வினியோகிக்கப்படும் குடிநீரை குடிப்பதால் மக்களுக்கு உடல்நலக்குறைவு, காய்ச்சல் மற்றும் வயிற்றுப் போக்கு உள்ளிட்ட நோய்கள் ஏற்படுவதாகவும் எனவே குடிநீர் தொட்டியை சுத்தம் செய்ய வேண்டும் என்றும் நீர்த்தேக்க தொட்டி ஆபரேட்டரிடம், கிராம மக்கள் பலமுறை கோரிக்கை விடுத்துள்ளனர். ஆனால் அதை அவர் கண்டு கொள்ளவில்லை என தெரிகிறது.

இதுகுறித்து கிராமமக்கள் தாசில்தார், வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் சுகாதாரத்துறை அலுவலர்களிடம் பலமுறை கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதனால் கிராம மக்கள் தாங்களாகவே முன்வந்து அந்த குடிநீர் தொட்டியை சுத்தம் செய்வது என முடிவு செய்தனர்.

இதனைத்தொடர்ந்து ஊராட்சி செயலாளர் முன்னிலையில் அதே பகுதியை சேர்ந்த 10 பேர் குடிநீர் தொட்டிக்குள் இறங்கி சுத்தம் செய்தனர். அப்போது அங்கு வந்த ஆபரேட்டர் மற்றும் அவருடைய ஆதரவாளர்கள் 6 பேர் சேர்ந்து, நீங்கள் எப்படி தொட்டியை சுத்தம் செய்யலாம் எனக்கூறி கிராம மக்களை தாக்கினர்.

இதனைத்தொடர்ந்து குடிநீர் தொட்டியை சுத்தம் செய்தவர்களை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி ஆபரேட்டரை இடமாற்றம் செய்ய வேண்டும் என வலியுறுத்தி 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலங்கிய குடிநீருடன் திரண்டு வந்து பேராவூரணி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.

அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதேபோல் குடிநீர் தொட்டி ஆபரேட்டர் சார்பிலும் போலீசில் ஒரு புகார் மனு கொடுக்கப்பட்டது. இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்