புயலால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் நிவாரணம் கிடைக்க நடவடிக்கை முதன்மை செயலாளர் தகவல்

புயலால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் நிவாரணம் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என முதன்மை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறினார்.

Update: 2018-12-12 23:00 GMT
நாகப்பட்டினம்,

கஜா புயலால் பாதிக்கப்பட்ட செருதூர் மீனவ கிராம மக்களை பொது சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை முதன்மை செயலாளர் ராதாகிருஷ்ணன், செருதூர் சமுதாய கூடத்தில் சந்தித்தார். பின்னர் அங்கு நடைபெற்று வரும் நிவாரண பணிகள் குறித்தும், அவர்களது கோரிக்கைகள் குறித்தும் கேட்டறிந்தார்.

புயலின் தாக்கத்தால் தங்களது மீன்பிடி படகுகள், வலைகள், மீன்பிடி உபகரணங்கள் உள்ளிட்ட வாழ்வாதாரங்களை இழந்துள்ள அப்பகுதி மக்களுக்கு ஆறுதல் கூறினார். அப்போது அவர் கூறியதாவது:–

புயலால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் உரிய நிவாரணம் கிடைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. புயலின் போது சேதமடைந்த படகுகள் சரி செய்து தரும் வகையில் மீன்வளத்துறை சார்பில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.


 மீனவர்களுக்கு இழப்பீடு கிடைக்கும் வரை காத்திருக்காமல், தற்போது பயன்படுத்தும் நிலையில் உள்ள படகுகளை கொண்டு மீன்பிடி தொழிலை தொடங்கி, இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப வேண்டும். இந்த புயலால் படகுகள் உள்ளிட்ட உடைமைகளை இழந்து வாடும் அனைவருக்கும் விரைவில் உதவிகள் வழங்க தமிழக அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

அப்போது பல்வேறு துறையை சேர்ந்த அரசு அதிகாரிகள் உடனிருந்தனர்.

மேலும் செய்திகள்