மதுராந்தகம் அருகே ஓடும் பஸ்சில் பெண்ணிடம் ரூ.1 லட்சம் திருட்டு 4 பெண்கள் கைது

மதுராந்தகம் அருகே ஓடும் பஸ்சில் பெண்ணிடம் ரூ.1 லட்சம் திருடப்பட்டது.

Update: 2018-12-12 22:15 GMT
மதுராந்தகம்,

மதுராந்தகம் அருகே உள்ள கொளம்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் சுபா. இவர் அடகு கடையில் வைத்திருந்த நகையை மீட்பதற்காக ரூ.1 லட்சத்தை பையில் வைத்துக்கொண்டு அரசு பஸ்சில் மதுராந்தகம் நோக்கி சென்றார். பஸ்சில் கூட்டம் அதிகமாக இருந்தது. அவர் பஸ் நிலையத்தில் இறங்கிய போது அவரிடம் இருந்த பணப்பையை காணவில்லை. அதனை மர்மநபர்கள் திருடிச்சென்றிருப்பது தெரிய வந்தது.

இது குறித்து மதுராந்தகம் போலீசில் அவர் புகார் செய்தார். போலீஸ் இன்ஸ்பெக்டர் அந்தோணி ஸ்டாலின், சப்-இன்ஸ்பெக்டர் ஜெயராமன் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர்.

இந்த நிலையில் மதுராந்தகம் பஸ் நிலையத்தில் சந்தேகத்திற்கு இடமான வகையில் நின்று கொண்டிருந்த 4 பெண்களை போலீசார் பிடித்து விசாரித்தனர். போலீஸ் விசாரணையில் அவர்கள் மதுரையை சேர்ந்த உஷா (வயது 48), அனிதா(42), அபிராமி (38), கல்யாணி(34) என்பது தெரியவந்தது. அவர்கள் 4 பேரும் ஓடும் பஸ்சில் கூட்ட நெரிசலை பயன்படுத்தி சுபாவிடம் இருந்த பணப்பையை திருடியதை ஒத்துக்கொண்டனர்.

அவர்கள் 4 பேரையும் கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்த ரூ.1 லட்சத்தை மீட்டனர்.

மேலும் செய்திகள்