நாமக்கல் சிறையில் விசாரணை கைதி தற்கொலைக்கு முயற்சி

நாமக்கல் கிளை சிறையில் விசாரணை கைதி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Update: 2018-12-12 22:30 GMT
நாமக்கல், 

நாமக்கல் அருகே உள்ள முத்துகாப்பட்டியை அடுத்த புதுக்கோம்பை கிராமத்தை சேர்ந்தவர் கண்ணன். இவரது மகன் சிவக்குமார் (வயது27). இவரை கடந்த செப்டம்பர் மாதம் 25-ந் தேதி வழிப்பறி வழக்கு ஒன்றில் நாமக்கல் போலீசார் கைது செய்தனர். பின்னர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட சிவக்குமார் நாமக்கல் கிளை சிறையில் விசாரணை கைதியாக அடைக்கப்பட்டார்.

இந்த நிலையில் நேற்று காலை சிவக்குமார் தான் வைத்திருந்த டவலை கிழித்து சிறையில் உள்ள அறைக்குள் தூக்குப்போட்டு தற்கொலைக்கு முயன்று உள்ளார். இதைக் கண்ட சக கைதிகள் சிவக்குமாரை காப்பாற்றி, சிறை காவலர்களிடம் ஒப்படைத்தனர். அவர்கள் சிவக்குமாரை நாமக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்கு அழைத்து சென்றனர். அங்கு முதலுதவி சிகிச்சைக்கு பின்னர் அவருக்கு மனரீதியான கலந்தாய்வு கொடுக்க சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

இதற்கிடையே இச்சம்பவம் குறித்து கிளை சிறை கண்காணிப்பாளர் ராஜமோகன், நாமக்கல் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் சிவக்குமார் மீது தற்கொலைக்கு முயற்சி செய்ததாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சிவக்குமார் மீது திருட்டு, ஏமாற்றி பணம் பறித்தல் உள்ளிட்ட 4 வழக்குகள் நிலுவையில் இருப்பதாக போலீசார் கூறினர்.

சிறையில் விசாரணை கைதி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் நாமக்கல்லில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்