வருமான வரித்துறை முடக்கிய பங்களா வீட்டை விற்ற தொழில் அதிபர் கைது
வருமான வரித்துறை முடக்கிய பங்களா வீட்டை வேறொருவருக்கு விற்ற தொழில் அதிபரை போலீசார் கைது செய்தனர்.
மும்பை,
மும்பை கோராய் பகுதியை சேர்ந்தவர் சிமேன் பட்டேல். தொழில் அதிபர். இவரது நிறுவனம் கடந்த 2009-ம் ஆண்டு முதல் 2013-ம் ஆண்டு வரை ரூ.5 கோடியே 50 லட்சம் வரை வரி ஏய்ப்பு செய்திருந்தது வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில் கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக வருமான வரித்துறை அதிகாரிகள் அவர் மீது நடவடிக்கை எடுத்தனர்.
மேலும் அவரது பங்களா வீட்டையும் முடக்கினர். அந்த பங்களா வீட்டை வருமான வரித்துறையினர் ஏலத்தில் விட திட்டமிட்டு இருந்தனர்.
இந்தநிலையில், சிமேன் பட்டேல் அந்த பங்களா வீட்டை வருமான வரித்துறையினர் முடக்கியதை மறைத்து, குப்தா என்பவருக்கு விற்பனை செய்து மோசடியில் ஈடுபட்டிருந்தது தெரியவந்தது.
இதுபற்றி வருமான வரித்துறை அதிகாரிகள் காம்தேவி போலீசில் புகார் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சிமேன் பட்டேலை கைது செய்தனர்.
மேலும் இது தொடர்பாக அவரிடம் தீவிர விசாரணை நடந்து வருகிறது.