கலெக்டர் அலுவலகம் முன் கிராம நிர்வாக அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்

நாகர்கோவிலில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன் கிராம நிர்வாக அலுவலர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Update: 2018-12-13 23:00 GMT
நாகர்கோவில்,

தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கம் சார்பில், பெண் கிராம நிர்வாக அலுவலர்கள் அவரவர் சொந்த மாவட்டங்களில் பணிபுரிய மாவட்ட மாறுதல் வழங்க வேண்டும், கிராம நிர்வாக அலுவலகங்களுக்கு மின்வசதி, கழிப்பறை வசதி, குடிநீர் வசதி ஏற்படுத்தி தரவேண்டும், காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில் கடந்த 3 நாட்களாக “மக்களைத்தேடி“ என்ற போராட்டத்தில் கிராம நிர்வாக அலுவலர்கள் ஈடுபட்டு வந்தனர். குமரி மாவட்டத்தில் ஒவ்வொரு தாலுகா வாரியாக இந்த போராட்டம் நடந்தது. தற்செயல் விடுப்பு எடுத்து இந்த போராட்டத்தை நடத்தியதால் கிராம நிர்வாக அலுவலகங்களில் பணிகள் முடங்கின.

இதைத் தொடர்ந்து தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கம் சார்பில் நேற்று கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டம் தாலுகா அலுவலகங்கள் முன் நடந்தது.

நாகர்கோவிலில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் செயல்பட்டு வரும் அகஸ்தீஸ்வரம் தாலுகா அலுவலகம் முன் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு வட்ட தலைவர் செந்தில் கார்த்திகேயன் தலைமை தாங்கினார். செயலாளர் சிவசங்கர் முன்னிலை வகித்தார். மாவட்ட செயலாளர் நாகேஸ்வரகாந்த், பொருளாளர் ஈஸ்வரி உள்பட பலர் கலந்துகொண்டு தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோ‌ஷங்களை எழுப்பினர். இந்த கோரிக்கையை வலியுறுத்தி நேற்று மாலையிலும் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

மேலும் செய்திகள்