சார் பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை ரூ.1¼ லட்சம் பறிமுதல்; 7 பேர் மீது வழக்கு

லால்குடி சார் பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினர். இதில் கணக்கில் வராத ரூ.1¼ லட்சத்தை பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக 7 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.

Update: 2018-12-13 22:15 GMT
லால்குடி,

லால்குடி தாலுகா அலுவலக பகுதியில் சார் பதிவாளர் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. நேற்று வழக்கம்போல் சார் பதிவாளர் அலுவலகத்தில் பணிகள் நடைபெற்றது. இந்நிலையில் மாலை 4.30 மணி அளவில் திடீரென 2 கார்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார், சார் பதிவாளர் அலுவலகம் முன்பு வந்து இறங்கினர். அவர்கள், அலுவலகத்தின் முன்பு நின்றவர்களை சார்பதிவாளர் அலுவலத்தின் உள்ளே அழைத்து சென்றனர்.

இதையடுத்து இன்ஸ்பெக்டர்கள் சக்திவேல், நவநீதகிருஷ்ணன், அருள்தேவி, சேவியர் ராணி உள்பட 20-க்கும் மேற்பட்ட லஞ்ச ஒழிப்பு போலீசார் அலுவலகத்தில் சோதனை நடத்தினர். மேலும் பத்திரப்பதிவுக்கு வந்திருந்தவர்களிடம், அதற்கான பதிவு ரசீது உள்ளதா? என்று கேட்டனர். உள்ளே இருந்த பத்திரப்பதிவு எழுத்தர்களிடமும் விசாரணை நடத்தினர்.

மேலும் லால்குடி சார் பதிவாளர் ஹேமலதா மற்றும் முதன்மை உதவியாளர் அலுவலக எழுத்தர்கள், அலுவலக உதவியாளர்களிடமும் விசாரணை நடத்தினர். இரவு 10.45 மணி வரை சோதனை நடந்தது. இதில் அலுவலகத்தில் இருந்தவர்களிடம் இருந்து கணக்கில் வராத ரூ.1 லட்சத்து 29 ஆயிரத்தை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைப்பற்றி பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக அலுவலர்கள், எழுத்தர்கள் மற்றும் பத்திரப்பதிவுக்கு வந்தவர்கள் என 7 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். 

மேலும் செய்திகள்