நாகை மாவட்டத்தில் புயலால் சேதமடைந்த 43 ஆயிரம் மின்கம்பங்கள் சீரமைப்பு கலெக்டர் சுரேஷ்குமார் தகவல்

நாகை மாவட்டத்தில் புயலால் சேதமடைந்த 43 ஆயிரம் மின்கம்பங்கள் சீரமைப்பட்டுள்ளதாக கலெக்டர் சுரேஷ்குமார் கூறினார்.

Update: 2018-12-14 23:30 GMT
நாகப்பட்டினம்,

நாகை கலெக்டர் அலுவலகத்தில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் சீரமைப்பு பணிகள், நிவாரண பொருட்கள் மற்றும் நிவாரண தொகை வழங்கும் பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் சுரேஷ் குமார் தலைமை தாங்கி, பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

நாகை மாவட்டத்தில் புயல் நிவாரண முகாம்களில் 5 ஆயிரத்து 393 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மாவட்டத்தில் சீரமைப்பு பணிகளை கண்காணிக்க மாவட்ட அளவிலான அலுவலர்கள் கொண்ட 15 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இத்தகைய நடவடிக்கைகளால் மாவட்டத்தில் எவ்வித சுகாதார கேடு, தொற்று நோய்கள் பரவாமலும் தடுக்கப்பட்டுள்ளது. அனைத்து பகுதிகளிலும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் முழுமையாக வழங்கப்பட்டு வருகின்றன. கால்நடைகளுக்கும் உரிய மருத்துவ சிகிச்சைகள் மற்றும் தீவனங்கள் வழங்கப்பட்டுள்ளன.

புயலால் 49 ஆயிரம் மின் கம்பங்கள் சேதமடைந்ததாக கண்டறியப்பட்டுள்ளன. இதில் 43 ஆயிரம் மின்கம்பங்கள் சீரமைக்கப்பட்டுள்ளன. 592 டிரான்ஸ்பார்மர்கள் சேதமடைந்துள்ளன. இதில் 582 டிரான்ஸ்பார்மர்கள் சீர் செய்யப்பட்டுள்ளன. புயல் பாதித்த பகுதிகளில் மீட்பு மற்றும் சீரமைப்பு பணிகளில் 4 ஆயிரத்து 747 பேர் ஈடுபட்டு வருகின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.

இதில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் சங்கர், மின் வாரிய உயர் அலுவலர்கள் மற்றும் அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


மேலும் செய்திகள்