கொலை வழக்கில் ஜாமீனில் வந்த தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை

கொலை வழக்கில் ஜாமீனில் வெளி வந்த தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2018-12-15 22:00 GMT
சூளகிரி, 

கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்செட்டியை சேர்ந்தவர் சேஷாத்திரி (வயது 32). இவர் சூளகிரி சின்னாறு பகுதியில் உள்ள ஒரு தாபா ஓட்டலில் தங்கி வேலை செய்து வந்தார். இவர் மீது ஒரு கொலை வழக்கு உள்ளது. அந்த வழக்கில் இருந்து கடந்த சில நாட்களுக்கு முன்பு ஜாமீனில் சேஷாத்திரி வெளியே வந்தார்.

இதையொட்டி அவர், தாபா ஓட்டலில் தங்கி இருந்தவாறு வேலை செய்து வந்தார். சேஷாத்திரி கடந்த சில நாட்களாக மனமுடைந்த நிலையில் காணப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் சிறை வாழ்க்கையில் வெறுப்படைந்த சேஷாத்திரி தான் வேலை செய்து வந்த தாபா ஓட்டலின் பின்புறமாக உள்ள குடிசை ஒன்றில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து சூளகிரி போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.

பின்னர் சேஷாத்திரியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஓசூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த தற்கொலை தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்