டி.வி. பார்த்ததை தாயார் கண்டித்ததால் கல்லூரி மாணவி தற்கொலை

ஆறுமுகநேரியில் டி.வி. பார்த்ததை தாயார் கண்டித்ததால், கல்லூரி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2018-12-15 22:00 GMT
ஆறுமுகநேரி, 

ஆறுமுகநேரி கணேசபுரத்தைச் சேர்ந்தவர் கருப்பசாமி. இவர் ஆடு வளர்த்து வருகிறார். இவருடைய மனைவி பேச்சியம்மாள். இவர்களுக்கு ரமேஷ் (20), பூல்தாஸ் (15) ஆகிய 2 மகன்களும், பாலமுருகேசுவரி (17) என்ற மகளும் இருந்தனர். பாலமுருகேசுவரி காயல்பட்டினத்தில் உள்ள தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார். இவர் நேற்று முன்தினம் மாலையில் வீட்டில் டி.வி. பார்த்து கொண்டிருந்தார். இதனை தாயார் பேச்சியம்மாள் கண்டித்தார். இதனால் மனமுடைந்த பாலமுருகேசுவரி வீட்டின் மாடியில் உள்ள அறைக்கு சென்று, அங்கு மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இரவில் பாலமுருகேசுவரியை சாப்பிட அழைத்து வருவதற்காக அவருடைய தம்பி பூல்தாஸ் சென்றார். அப்போது பாலமுருகேசுவரி தூக்கில் பிணமாக தொங்கியதை பார்த்து அதிர்ச்சி அடைந்து அலறினார். அவரது உடலை பார்த்து பெற்றோர் கதறி அழுதனர்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும், ஆறுமுகநேரி போலீஸ் இன்ஸ்பெக்டர் பத்திரகாளி என்ற பவுன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று, பாலமுருகேசுவரியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்