பெரம்பலூரில் குழந்தையை கொன்று கடத்தல் நாடகமாடிய தாய் கைது பரபரப்பு தகவல்கள்

பெரம்பலூரில் குழந்தையை கொன்று கடத்தல் நாடகமாடிய தாயை போலீசார் கைது செய்தனர்.

Update: 2018-12-15 23:00 GMT
மங்களமேடு,

பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை தாலுகா தேவையூர் நடுத்தெருவை சேர்ந்தவர் பிச்சைபிள்ளை. இவரது மனைவி கோவிந்தம்மாள்(வயது 30). இவர் நேற்று முன்தினம் பெரம்பலூர் போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் கொடுத்தார். அதில், எனது 2-வது மகளான 3 மாத கைக்குழந்தை பிரினித்தாவுக்கு வெள்ளி கொலுசு வாங்குவதற்காக, குழந்தையை தூக்கி கொண்டு பெரம்பலூருக்கு, வாலிகண்டபுரத்தில் இருந்து ஒரு அரசு பஸ்சில் ஏறி வந்தேன். பெரம்பலூர் பழைய பஸ் நிலையத்திற்கு பஸ் வந்தபோது, பஸ்சில் நினைவற்ற நிலையில் நான் இருந்தேன். பின்னர் சுயநினைவு எனக்கு வந்தபோது, மடியில் வைத்திருந்த 3 மாத கைக்குழந்தை பிரினித்தாவையும், வெள்ளி நகைகள் வாங்க வைத்திருந்த ரூ.5 ஆயிரம் இருந்த மணி பர்சு, விலையுயர்ந்த செல்போன் ஆகியவற்றை காணவில்லை.

நான் எனது குழந்தையுடன் பஸ்சில் பயணம் செய்யும்போது, அருகே அமர்ந்திருந்த 45 வயது மதிக்கத்தக்க மஞ்சள் நிற சேலை அணிந்த பெண் என்னை நினைவிழக்க செய்து, எனது குழந்தையை கடத்தியும், பணம், செல்போன் ஆகியவற்றை எடுத்தும் சென்று விட்டார். எனவே இது தொடர்பாக நடவடிக்கை எடுத்து எனது குழந்தையை கண்டுபிடித்து தருமாறு அந்த புகாரில் அவர் கூறியிருந்தார்.

ஆனால் புகார் கூறிய கோவிந்தம்மாளின் நடவடிக்கையில் போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டதால், அவரிடம் கிடுக்கிப்பிடி விசாரணையை தொடங்கினர். அப்போது போலீசாருக்கு ஒரு அதிர்ச்சி காத்திருந்தது. நான் தான் குழந்தையை வல்லாபுரத்தில் ஒரு தோட்டத்தில் உள்ள கிணற்றில் வீசி கொன்று விட்டதாக அதிர்ச்சிகரமான தகவலை கோவிந்தம்மாள் போலீசாரிடம் தெரிவித்தார். பின்னர் குழந்தையை தூக்கி வீசியதாக அவர் கூறிய கிணற்றுக்கு போலீசார் நேற்று காலையில் சென்றனர். அப்போது கிணற்றில் பார்த்தபோது பிரினித்தா பிணமாக மிதந்தாள். இதையடுத்து பெரம்பலூர் தீயணைப்பு நிலைய வீரர்கள் உதவியுடன் பிரினித்தாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் செய்திகள்