8-ம் வகுப்பு மாணவர்களுக்கு மத்திய அரசின் கல்வி உதவித்தொகை பெறுவதற்கான தேர்வு 1,640 பேர் எழுதினர்

8-ம் வகுப்பு மாணவர்களுக்கு மத்திய அரசின் கல்வி உதவித்தொகை பெறுவதற்கான எழுத்துத்தேர்வை 1,640 பேர் எழுதினர்.

Update: 2018-12-15 22:30 GMT
பெரம்பலூர்,

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 8-ம் வகுப்பு பயிலும் மாணவ- மாணவிகளுக்காக மத்திய அரசு நடத்தும் தேசிய வருவாய்வழி மற்றும் திறன் படிப்புதவி தொகைக்கான தேர்வு பெரம்பலூர் மாவட்டத்தில் 11 இடங்களில் நேற்று நடந்தது. இதில் பெரம்பலூர் அரசினர் மேல்நிலைப்பள்ளியில் நடந்த தேர்வினை 165 பேர் எழுதினர். இதற்கான ஏற்பாடுகளை பள்ளியின் தலைமை ஆசிரியர் (பொறுப்பு) வெங்கடேசன், உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியை இந்திரா நேரு மற்றும் ஆசிரியர்கள் செய்திருந்தனர்.

இதில் மாணவ- மாணவிகளுக்கு காலை 9.30 மணி முதல் 11 மணி வரை 90 மதிப்பெண்களுக்கு மனத்திறன் தேர்வாகவும், அதன் பிறகு ½ மணி நேரம் இடைவெளிக்கு பிறகு காலை 11.30 மணி முதல் மதியம் 1 மணி வரை படிப் பறிவு தேர்வாகவும் என 2 தேர்வுகள் நடந்தது.

கல்வி உதவித்தொகை

இந்த தேர்வினை பெரம்பலூர் மாவட்டத்தில் மொத்தம் 1,776 பேர் எழுத விண்ணப்பித்திருந்தனர். ஆனால் 1,640 பேர் மட்டும் தேர்வு எழுத வந்திருந்தனர். இந்த தேர்வில் மாவட்டத்தில் அதிக மதிப்பெண் பெறும் முதல் 50 மாணவர்களுக்கும், 50 மாணவிகளுக்கும் பிளஸ்-2 படிக்கும் வரை ஆண்டுதோறும் கல்வி உதவித்தொகையாக ரூ.ஆயிரம் மத்திய அரசால், அவர்களின் வங்கிகணக்கில் செலுத்தப் படும் என கல்வி அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

மேலும் செய்திகள்