பல்லடம் அருகே சிறுமி பாலியல் பலாத்காரம்; தொழிலாளி கைது

பல்லடம் அருகே சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.

Update: 2018-12-15 22:41 GMT
காமநாயக்கன்பாளையம்,

பல்லடம் அருகே சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.

இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

திருப்பூரை அடுத்த மங்கலம் அருகே இடுவாய், பாரதி நகரை சேர்ந்தவர் தர்மன் (வயது 52). தொழிலாளி. இவருக்கு பல்லடம் அருகே உள்ள கரைப்புதூர் கிராமத்தில் உறவினர்கள் உள்ளனர். இந்த நிலையில் கடந்த ஆண்டு தர்மன் கரைப்புதூருக்கு ஒரு துக்கநிகழ்ச்சிக்கு சென்று இருந்தார். அப்போது அங்குள்ள தனது உறவினர் வீட்டுக்கு சென்று உள்ளார். அங்கு உறவினரின் 16 வயது மகளுடன் தர்மனுக்கு பழக்கம் ஏற்பட்டது.

அந்த சிறுமி 9-ம் வகுப்பு படித்து முடித்து விட்டு வீட்டிலேயே கடந்த 2 ஆண்டுகளாக இருந்து வந்தார். சிறுமியின் தாய், தந்தை இருவரும் கூலி வேலைக்கு சென்று வந்தனர். இந்த நிலையில் தர்மன் அடிக்கடி அங்கு சென்று பெற்றோரையும், சிறுமியையும் சந்தித்து வந்தார்.

பின்னர் சிறுமியிடம் இருந்து செல்போன் நம்பரையும் வாங்கி கொண்டு அடிக்கடி தொடர்பு கொண்டு பேசி வந்தார். இந்த நிலையில் கடந்த 9-ந்தேதி வீட்டில் இருந்த சிறுமியை காணவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த சிறுமியின் பெற்றோர் பல்லடம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர்.

அதன்பிறகு சந்தேகத்தின் பேரில் தர்மனின் செல்போனுக்கு சிறுமியின் பெற்றோர் தொடர்பு கொண்டு பேசிய போது, தனது மகள் அவரது வீட்டில் இருப்பது தெரிய வந்தது.

இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள் இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனே போலீசார் தர்மன் வீட்டுக்கு சென்று அங்கு இருந்த சிறுமியை மீட்டனர். போலீசார் தன்னை தேடுவதை அறிந்த தர்மன் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார். பின்னர் சின்னகாளிபாளையம் குட்டை பகுதியில் பதுங்கி இருந்த தர்மனை நேற்று போலீசார் பிடித்தனர்.

இதையடுத்து போலீசாரிடம், சிறுமியை சுற்றுலா அழைத்து செல்வதாக ஆசைவார்த்தை கூறி வீட்டுக்கு அழைத்து வந்து அவரை பாலியல் பலாத்காரம் செய்ததாக தர்மன் தெரிவித்தார். இதையடுத்து போலீசார் அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குபதிவு செய்து கைது செய்தனர். அதன் பிறகு அவரை பல்லடம் கோர்ட்டில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

மேலும் செய்திகள்