ஓடும் ரெயிலில் இருந்து தவறி விழுந்த நர்சிங் கல்லூரி மாணவி பலி

ஓடும் ரெயிலில் இருந்து தவறி விழுந்த நர்சிங் கல்லூரி மாணவி பலியானார்.

Update: 2018-12-15 23:58 GMT
அம்பர்நாத்,

தானே மாவட்டம் உல்லாஸ்நகர், சுபாஷ் தெகிடி பகுதியை சேர்ந்தவர் ஜன்ஜிவன் (வயது47). காவலாளி. இவரது மகள் சஞ்சனா (வயது20). இவர் நவிமும்பையில் உள்ள நர்சிங் கல்லூரியில் படித்து வந்தார். சம்பவத்தன்று காலை 10.15 மணியளவில் மாணவி உல்லாஸ்நகரில் இருந்து சி.எஸ்.எம்.டி. நோக்கி வந்த விரைவு ரெயிலில் பயணம் செய்தார்.

ரெயிலில் கூட்டம் அதிகமாக இருந்ததால், மாணவி வாசலில் நின்று கொண்டு இருந்தார். இந்தநிலையில், ரெயில் புறப்பட்ட சில நிமிடங்களில் மாணவி நிலைதடுமாறி கீழே விழுந்தார். இதில் மாணவி படுகாயமடைந்து உயிருக்கு போராடினார்.

தகவல் அறிந்து சென்ற ரெயில்வே போலீசார் தலையில் பலத்த காயமடைந்து கிடந்த மாணவியை மீட்டு உல்லாஸ்நகர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு மாணவியை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக கூறினர்.

இந்த விபத்து குறித்து ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். நடப்பாண்டில் மட்டும் மும்பையில், ரெயில் விபத்தில் சிக்கி 654 பேர் பலியாகி உள்ளனர். மேலும் 1,434 பேர் படுகாயமடைந்து உள்ளதாக புள்ளி விவரங்கள் கூறுகின்றன.

மேலும் செய்திகள்