திருப்பூரில் வாலிபர் படுகொலை கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் பிணமாக கிடந்தார்

திருப்பூரில் வாலிபர் படுகொலை செய்யப்பட்டார். கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் பிணமாக கிடந்தார். இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

Update: 2018-12-16 23:00 GMT
திருப்பூர், 

திண்டுக்கல் மாவட்டம் சிலுக்குவார் பட்டியை சேர்ந்தவர் முருகன் (வயது 20). இவருடைய நண்பர் ஆறுமுகம் (20). இவர்கள் 2 பேரும் திருப்பூர் மாஸ்கோநகர் அருகில் உள்ள வசந்தம் நகரில் அறை எடுத்து தங்கி அங்குள்ள பனியன் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார்கள்.

இந்த நிலையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் இவர்கள் வேலை பார்க்கும் பனியன் நிறுவனத்திற்கு விடுமுறையாகும். இந்த நிலையில் நேற்று மாலையில் முருகன் மட்டும் அறையை விட்டு வெளியே சென்றார். அதன் பின்னர் அவர் அறைக்கு திரும்பவில்லை.

இதற்கிடையில் நேற்று இரவு 9.30 மணிக்கு வசந்தம் நகரில் உள்ள ஒரு வீதியில் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில், உடலில் பல்வேறு இடங்களில் கூர்மையான ஆயுதத்தால் குத்தப்பட்டு முருகன் பிணமாக கிடந்தார். இது குறித்து திருப்பூர் வடக்கு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை செய்தனர். பின்னர் போலீஸ் மோப்பநாய் வரவழைக்கப்பட்டது. இந்த மோப்ப நாய், முருகன் உடல் கிடந்த இடத்தில் இருந்து மோப்பம் பிடித்து காலேஜ் ரோடு வழியாக சிறிது தூரம் ஓடியது. ஆனால் யாரையும் கவ்வி பிடிக்கவில்லை. பின்னர் தடயவியல் நிபுணர்கள் சம்பவ இடத்திற்கு வந்து அங்கு கிடந்த தடயங்களை சேகரித்தனர். பின்னர் முருகனின் உடல் பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

முருகனை கொலை செய்த மர்ம ஆசாமிகள் யார்? எதற்காக கொலை செய்தனர் என்று திருப்பூர் வடக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து கொலையாளிகளை தேடி வருகிறார்கள். அறையை விட்டு வெளியே சென்ற வாலிபர் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் பிணமாக கிடந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

மேலும் செய்திகள்