கட்டிட சுவர் இடிந்து விழுந்து அரசு ஊழியர் சாவு: வீட்டு உரிமையாளரிடம் தகராறு செய்த 3 பேர் கைது

கட்டிட சுவர் இடிந்து விழுந்து அரசு ஊழியர் இறந்தார். இதுகுறித்து வீட்டின் உரிமையாளரிடம் தகராறில் ஈடுபட்ட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2018-12-17 00:49 GMT
சிவகங்கை,

சிவகங்கை திருவள்ளுவர் தெருவை சேர்ந்தவர் முத்துமுருகன் (வயது 58). இவர் மானாமதுரை நெடுஞ்சாலைத்துறையில் சாலை ஆய்வாளராக பணியாற்றி வந்தார். கடந்த மாதம் காலையில் வீட்டில் இருந்து அருகில் உள்ள கடைக்கு சென்று விட்டு, மீண்டும் வீட்டிற்கு வந்தபோது அவர் மீது அந்த பகுதியில் இருந்த ஒருகட்டிடத்தின் சுவர் இடிந்து விழுந்தது.

அதில் முத்துமுருகன் பரிதாபமாக இறந்து போனார். இந்த சம்பவத்தை தொடர்ந்து இறந்தவரின் உறவினர்கள் செல்வகுமார் (வயது 42) கருப்பையா (48), நாகராஜ் (33) மற்றும் சரவணன் ஆகிய 4 பேர் சுவர் இடிந்து விழுந்த வீட்டிற்கு சென்றனர்.

அங்கு வீட்டின் உரிமையாளரான சாதிக் அலி என்பவரிடம் 4 பேரும் தகராறு செய்தார்களாம். இதுகுறித்து அவரது மனைவி ஆயிஷாசித்திக் கொடுத்த புகாரின் பேரில் சிவகங்கை நகர் இன்ஸ்பெக்டர் அழகர் 4 பேர் மீது வழக்கு பதிவு செய்து, செல்வகுமார், கருப்பையா, நாகராஜ் ஆகிய 3 பேரை கைது செய்தனர். மேலும் தலைமறைவான சரவணனை போலீசார் தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்