கோட்டாட்சியர் அலுவலகங்கள் முன் கிராம நிர்வாக அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்

குமரி மாவட்டத்தில் உள்ள கோட்டாட்சியர் அலுவலகங்கள் முன் கிராம நிர்வாக அலுவலர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Update: 2018-12-17 23:00 GMT
நாகர்கோவில்,

பெண் கிராம நிர்வாக அலுவலர்கள் அவரவர் சொந்த மாவட்டத்தில் பணிபுரிய மாவட்ட மாறுதல் வழங்க வேண்டும், கிராம நிர்வாக அலுவலகங்களுக்கு மின்வசதி, கழிப்பிட வசதி, குடிநீர் வசதி செய்து தரவேண்டும், இணையதளம் மூலம் சான்றுகள் வழங்க ஏதுவாக கம்ப்யூட்டர், இணையதள வசதி செய்துதர வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி கிராம நிர்வாக அலுவலர்கள் பல்வேறு கட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இந்தநிலையில் நேற்று குமரி மாவட்டத்தில் உள்ள கோட்டாட்சியர் அலுவலகங்கள் முன் ஆர்ப்பாட்டம் நடந்தது. 

நாகர்கோவில் கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள கோட்டாட்சியர் அலுவலகம் முன் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்க மாவட்ட செயலாளர் நாகேஸ்வரகாந்த் தலைமை தாங்கினார். அகஸ்தீஸ்வரம் வட்ட தலைவர் செந்தில் கார்த்திகேயன், வட்ட செயலாளர் சிவசங்கர், தோவாளை வட்ட தலைவர் பாத்திமா ஷீபா, வட்ட செயலாளர் ஹரி நயினார், மாவட்ட பொறுப்பாளர் ஈஸ்வரி, சிவகுமார், மோகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இதேபோல் தக்கலையில் உள்ள பத்மநாபபுரம் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பும் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்க மாவட்ட தலைவர் செந்தில்குமார் தலைமை தாங்கினார். விளவங்கோடு வட்ட தலைவர் ராஜேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

ஆர்ப்பாட்டங்களில் கோரிக்கைகளை வலியுறுத்தி கோ‌ஷங்கள் எழுப்பப்பட்டன.

இன்று (செவ்வாய்க்கிழமை) நாகர்கோவிலில் கிராம நிர்வாக அலுவலர்கள் பேரணியாக சென்று கலெக்டரிடம் மனு கொடுக்கிறார்கள்.

மேலும் செய்திகள்