ஹலகூர் அருகே ஜே.பி.எம். லே-அவுட் பகுதியில் வியாபாரி வீட்டில் ரூ.10 லட்சம் நகைகள், பணம் திருட்டு மர்ம நபர்களை போலீஸ் தேடுகிறது

ஹலகூர் அருகே ஜே.பி.எம். லே-அவுட் பகுதியில் வியாபாரி வீட்டில் ரூ.10 லட்சம் மதிப்பிலான தங்க நகைகள் மற்றும் பணத்தை திருடிச்சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள்.

Update: 2018-12-17 21:30 GMT
ஹலகூர்,

மண்டியா மாவட்டம் மலவள்ளி தாலுகா ஹலகூர் அருகே ஜே.பி.எம். லே-அவுட் பகுதியில் வசித்து வருபவர் சிவண்ண கவுடா. வியாபாரி. இவர் நேற்று முன்தினம் வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் உறவினர் வீட்டிற்கு சென்றுவிட்டார். நேற்று காலையில் அவர் வீடு திரும்பினார். அப்போது வீட்டில் இருந்த பொருட்கள் சிதறிக் கிடந்தன. அனைத்து அறை களின் கதவுகளும் திறந்து கிடந்தன. பீரோ உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது.

அதில் வைக்கப்பட்டிருந்த ரூ.10 லட்சம் மதிப்பிலான தங்க நகைகள் மற்றும் பணத்தை காணவில்லை. வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டு கிடந்தது.

யாரோ மர்ம நபர்கள் வீட்டின் பின்பக்க கதவை உடைத்து உள்ளே புகுந்து பீரோவில் இருந்த நகைகள் மற்றும் பணத்தை திருடிச்சென்றுவிட்டது சிவண்ண கவுடாவுக்கு தெரியவந்தது.

இதுபற்றி அவர் ஹலகூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்வையிட்டனர். பின்னர் கைரேகை நிபுணர்களை வரவழைத்து அங்கு பதிந்திருந்த தடயங்களை பதிவு செய்து கொண்டனர். மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது. அது சம்பவம் நடந்த இடத்தில் இருந்து சிறிது தூரம் ஓடி நின்றுவிட்டது. ஆனால் யாரையும் கவ்விப்பிடிக்கவில்லை.

இதையடுத்து போலீசார் தாங்கள் கைப்பற்றிய தடயங்களை ஆய்வுக்காக தடய அறிவியல் பிரிவினருக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து சிவண்ண கவுடாவின் வீட்டில் நகைகள் மற்றும் பணத்தை திருடிய மர்ம நபர்களை வலைவீசி தேடிவரு கிறார்கள். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்