செஞ்சி அருகே தொழிலாளி, தீக்குளித்து தற்கொலை - வேலைக்கு செல்லாததை மனைவி கண்டித்ததால் விபரீதமுடிவு

செஞ்சி அருகே வேலைக்கு செல்லாததை மனைவி கண்டித்ததால் தொழிலாளி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2018-12-17 22:00 GMT
செஞ்சி, 

செஞ்சி அருகே உள்ள கெடார் இந்திரா நகரை சேர்ந்தவர் பரந்தாமன்(வயது 41), தொழிலாளி. குடிபழக்கத்துக்கு அடிமையான இவர் கடந்த சில மாதங்களாக சரிவர வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. சம்பவத்தன்று பரந்தாமன் வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்துள்ளார். இதையறிந்த அவரது மனைவி மாலா ஏன் வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருக்கிறீர்கள் என பரந்தாமனை கண்டித்துள்ளார். இதனால் மனமுடைந்த பரந்தாமன் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மண்எண்ணெயை எடுத்து தன்உடல் மீது ஊற்றி தீ வைத்துக் கொண்டார். வலியால் அலறித்துடித்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

பின்னர் அவர் மேல்சிகிச்சைக்காக சென்னை கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி பரந்தாமன் நேற்று உயிரிழந்தார். இதுகுறித்து மாலா கொடுத்த புகாரின்பேரில் கெடார் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்