பட்டா மாறுதல் கோரி மேட்டூர் உதவி கலெக்டர் அலுவலகத்தில் விஷம் குடித்த விவசாயி ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை

பட்டா மாறுதல் கோரி மேட்டூர் உதவி கலெக்டர் அலுவலகத்தில் விஷம் குடித்த விவசாயியால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2018-12-18 22:15 GMT
மேட்டூர்,

மேட்டூர் தாலுகாவுக்குட்பட்ட மேச்சேரி அருகே உள்ள அரங்கனூர் பகுதியை சேர்ந்தவர் வெங்கடாசலம் (வயது 31). விவசாயி. இவர் நேற்று காலை மேட்டூர் உதவி கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தார். பின்னர் அவர் அலுவலக நுழைவு வாயிலில் சோகத்துடன் அமர்ந்து இருந்தார். இதைபார்த்த அலுவலக ஊழியர் ஒருவர் அவரிடம் விசாரித்துள்ளார். அப்போது வெங்கடாசலம், தான் விஷம் குடித்து விட்டதாக தெரிவித்துள்ளார்.

மேலும் அவரது கையில் விஷ பாட்டில் இருந்தது. இதைத்தொடர்ந்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. பின்னர் அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு மேட்டூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இது குறித்து போலீசாரிடம் வெங்கடாசலம் கூறுகையில், எனது நிலத்துக்கு பட்டா மாறுதல் கேட்டு விண்ணப்பித்து இருந்தேன். ஆனால் இன்னும் பட்டா மாறுதல் கிடைக்கவில்லை. இதனால் உதவி கலெக்டர் அலுவலகத்தில் விஷம் குடித்ததாக தெரிவித்துள்ளார். இது தொடர்பாக வருவாய்த்துறை அதிகாரிகள் தெரிவிக்கையில், பட்டா மாறுதல் சம்பந்தமாக வெங்கடாசலத்தின் விண்ணப்பம் எதுவும் இல்லை. மேலும் அவரது நிலம் சம்பந்தமான வழக்கு கோர்ட்டில் உள்ளது என்று கூறினார்கள்.

மேட்டூர் உதவி கலெக்டர் அலுவலகத்தில் விவசாயி விஷம் குடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்