21 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கிராம நிர்வாக அலுவலர்கள் ஊர்வலம்

21 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர் சங்கத்தின் சார்பில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

Update: 2018-12-18 22:00 GMT

ராமநாதபுரம்,

தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர் சங்கத்தின் சார்பில் 21 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக நேற்று ராமநாதபுரத்தில் கிராம நிர்வாக அலுவலர் சங்கத்தினர் கோரிக்கைகளை வலியுறுத்தி ஊர்வலமாக சென்றனர். ஊர்வலத்திற்கு மாவட்ட தலைவர் சக்திவேல் தலைமை தாங்கினார். பொருளாளர் பாலகிருஷ்ணன் முன்னிலை வகித்தார். தென்மண்டல பொறுப்பாளர் சதீஷ், மாவட்ட துணை செயலாளர் அசோக்குமார், துணைத்தலைவர் கருப்பண்ணன், வட்டார செயலாளர் ஜெயகாந்தன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

ஊர்வலத்தில் சென்றவர்கள் கிராம நிர்வாக அலுவலகத்திற்கு கழிப்பறை, மின்சார வசதி, தளவாட சாமான்கள் போன்ற அடிப்படை வசதிகளை செய்து தரவ வேண்டும், காலி பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும், கூடுதல் பொறுப்பு வகிப்பவர்களுக்கு அதற்கான ஊதியம் வழங்க வேண்டும் என்ற வாசகங்கள் அடங்கிய அட்டைகளை ஏந்தியபடி சென்றனர். இதில் ஏராளமான கிராம நிர்வாக அலுவலர்கள் கலந்து கொண்டனர். பின்னர் அவர்கள் கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

மேலும் செய்திகள்