குள்ளஞ்சாவடி அருகே 6 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் - போக்சோ சட்டத்தில் பிளஸ்-2 மாணவர் கைது

குள்ளஞ்சாவடி அருகே 6 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த பிளஸ்-2 மாணவரை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்தனர்.

Update: 2018-12-18 22:00 GMT
குறிஞ்சிப்பாடி, 

குள்ளஞ்சாவடி பகுதியை சேர்ந்த 17 வயதுடைய மாணவர், கடலூரில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்து வருகிறார். இவருடைய பக்கத்து வீட்டில் 6 வயது சிறுமி பெற்றோருடன் வசித்து வருகிறாள். சம்பவத்தன்று சிறுமியின் பெற்றோர் வேலைக்கு சென்று விட்டனர். சிறுமி மட்டும் வீட்டில் தனியாக இருந்தாள்.

இதையடுத்து அந்த சிறுமி, வீட்டை பூட்டிவிட்டு பக்கத்து வீட்டில் விளையாடிக்கொண்டிருந்தாள். இதை பார்த்த அந்த மாணவர், சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதில் வலியால் சிறுமி அலறினாள். அவளது சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடிவந்தனர். உடனே அந்த மாணவர், அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.

இது குறித்து சிறுமியின் தாய் குள்ளஞ்சாவடி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து மாணவரை கைது செய்தனர். பின்னர் அந்த மாணவர் கடலூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு, கடலூரில் உள்ள சிறுவர் சீர்திருத்த பள்ளியில் அடைக்கப்பட்டார்.

மேலும் செய்திகள்