6 நாட்களுக்கு பிறகு மீன்பிடிக்க சென்ற மீனவர்கள் - கடலூர் துறைமுகம் களைகட்டியது

6 நாட்களுக்கு பிறகு மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர். இதனால் கடலூர் துறைமுகம் களை கட்டியது.

Update: 2018-12-18 22:15 GMT
கடலூர் முதுநகர், 

வங்கக்கடலில் உருவான தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறியது. பெய்ட்டி என பெயரிடப்பட்டிருந்த இந்த புயல் ஆந்திராவில் நேற்று முன்தினம் கரையை கடந்தது.

இதன் காரணமாக கடல் கொந்தளிப்புடன் காணப்பட்டதால் கடந்த 12-ந் தேதி முதல் 17-ந் தேதி வரை 6 நாட்கள் கடலூர் துறைமுகத்தில் இருந்து மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்லவில்லை. நேற்று முன்தினம் நள்ளிரவுக்கு மேல் கடல் சகஜ நிலைக்கு திரும்பி உள்ளது.

எனவே கடலூர் துறைமுகத்தில் இருந்து மீனவர்கள் நேற்று அதிகாலை முதல் மீன்பிடிக்க சென்றனர். விசைப்படகில் சென்றவர்கள் ஆழ்கடலில் தங்கி மீன்பிடித்து வருகிறார்கள். பைபர் படகுகளில் சென்ற மீனவர்களின் வலைகளில் வழக்கத்தை விட அதிகளவு மீன்கள் சிக்கின.

குறிப்பாக கானாங்கத்தை, கவலை, சங்கரா, பாறை, இறால் உள்ளிட்ட பல வகையான மீன்களும், நண்டுகளும் கிடைத்தன. இதனால் மீனவர்கள், கடலூர் துறைமுகத்துக்கு மகிழ்ச்சியுடன் வந்தனர். மீனவர்களின் வருகைக்காக காத்திருந்த உள்ளூர் மற்றும் வெளியூர், வெளி மாநில வியாபாரிகள் போட்டி போட்டு மீன்களை வாங்கிச்சென்றனர். மீன்களை வாங்க நகர வாசிகளும் துறைமுகத்துக்கு படையெடுத்துச்சென்றதால் அந்த பகுதி பரபரப்பாக காணப்பட்டது. இதனால் கடலூர் துறைமுகப்பகுதி 6 நாட்களுக்கு பிறகு நேற்று களைகட்டியது.

மேலும் செய்திகள்