தியாகதுருகம் அருகே தூங்கிக்கொண்டிருந்த பெண்ணிடம் நகை பறிப்பு - மர்மநபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு

தியாகதுருகம் அருகே தூங்கிக்கொண்டிருந்த பெண்ணிடம் நகையை பறித்துச்சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Update: 2018-12-19 22:15 GMT
கள்ளக்குறிச்சி, 

தியாகதுருகம் அருகே உள்ள புதுஉச்சிமேடு கிராமத்தை சேர்ந்தவர் செல்வம், தொழிலாளி. இவரது மனைவி அலமேலு (வயது 23). இவர்களுக்கு 2 வயதில் ஒரு குழந்தை உள்ளது. சம்பவத்தன்று இரவு செல்வம் தனது குடும்பத்தினருடன் சாப்பிட்டு முடித்ததும், வீட்டின் முன்பு உள்ள திண்ணையில் படுத்து தூங்கினார்.

இந்த நிலையில் நள்ளிரவு நேரத்தில் அவரது குழந்தை திடீரென அழுது கொண்டிருந்தது. இதனால் தூங்கிக்கொண்டிருந்த அலமேலு எழுந்து பார்த்தார். அப்போது அவரது கழுத்தில் கிடந்த 6 கிராம் நகையை காணவில்லை. நள்ளிரவில் மர்மநபர்கள் நகையை பறித்துச்சென்றது தெரியவந்தது.

பறிபோன நகையின் மதிப்பு ரூ.15 ஆயிரம் இருக்கும் என்று கூறப்படுகிறது. இதுகுறித்து அலமேலு வரஞ்சரம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, நகையை பறித்து சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். தூங்கிக்கொண்டிருந்த பெண்ணிடம் மர்மநபர்கள் நகையை பறித்து சென்ற சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்