வால்பாறையில் சத்துணவு மையத்தை சூறையாடிய காட்டு யானைகள்

வால்பாறையில் சத்துணவு மையத்தை காட்டு யானைகள் சூறையாடின.

Update: 2018-12-19 22:15 GMT
வால்பாறை,


வால்பாறை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் வனவிலங்குகளின் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக காட்டு யானைகள் கூட்டம், கூட்டமாக பகல் நேரங்களில் தேயிலை தோட்டங்களில் முகாமிட்டு வருகின்றன. இரவு நேரங்களில் குடியிருப்புகள் மற்றும் விவசாய நிலங்களில் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி வருகின்றன. வால்பாறை அருகே உள்ள கருமலை எஸ்டேட் புதுப்பாடி குடியிருப்பு பகுதிக்குள் நேற்று முன்தினம் இரவு 11 காட்டுயானைகள் புகுந்தன.

சிறிது நேரம் அப்பகுதியில் சுற்றித்திரிந்த யானைகள் பாலாஜி கோவில் அருகே உள்ள கருமலை எஸ்டேட் அரசு உதவிபெறும் நடுநிலைப்பள்ளி பள்ளிக்கூட வளாகத்திற்குள் புகுந்தன. பின்னர் சத்துணவு மைய கதவு மற்றும் ஜன்னலை உடைத்து அங்கிருந்த சத்துணவு அரிசி, உப்பு ஆகியவற்றை எடுத்து சாப்பிட்டுவிட்டு அங்கிருந்த பொருட்களை சூறையாடி விட்டு அங்கிருந்து சென்றன.

காலையில் வழக்கம்போல் பள்ளிக்கு வந்த தலைமையாசிரியர், சத்துணவு பணியாளர்கள் காட்டு யானைகள் சத்துணவு மையத்தை சூறையாடி இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த வால்பாறை நகராட்சி அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஆய்வு செய்தனர். பின்னர் மாற்று ஏற்பாடுகள் செய்து மாணவ-மாணவிகளுக்கு வழக்கம் போல் சத்துணவு வழங்கப்பட்டது.

காட்டு யானைகளின் அட்டகாசம் குறித்து தகவல் அறிந்த வால்பாறை வனச்சரக வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். பின்னர் அப்பகுதியில் முகாமிட்டு உள்ள காட்டு யானைகளின் நடமாட்டத்தை கண்காணித்து வருகிறார்கள்.

மேலும் செய்திகள்