பழனியில் தெருநாய்கள் கடித்து குதறியதில் மாணவி காயம்

பழனியில் தெருநாய்கள் கடித்து குதறியதில் மாணவி காயமடைந்தாள்.

Update: 2018-12-20 22:00 GMT
பழனி, 

பழனி அப்பர்தெருவை சேர்ந்தவர் நந்தகுமார். வியாபாரி. இவருடைய மகள் சிஷ்டி (வயது 5). இவள், பழனியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 1-ம் வகுப்பு படித்து வருகிறாள். நேற்று முன்தினம் மாலை சிஷ்டி, பக்கத்து தெருவில் உள்ள ஒரு வீட்டுக்கு டியூசனுக்கு சென்றார். பின்னர் இரவு டியூசன் முடிந்ததும், அவள் வீட்டுக்கு நடந்து சென்று கொண்டிருந்தாள்.

அப்போது அவளை, 5 தெருநாய்கள் துரத்த தொடங்கின. இதனால் மிரண்டு போன சிஷ்டி அங்கிருந்து ஓடினாள். ஆனால், 5 நாய்களும் அவளை துரத்தி சென்று கடித்து குதறின. நாய்களிடம் சிக்கிக் கொண்ட அவள், அலறினாள். அவளுடைய சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து நாயை துரத்தி, அவளை மீட்டனர். இதில் காயம் அடைந்த சிஷ்டி, பழனி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அங்கு அவளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

மேலும் செய்திகள்