நெய்வேலி அருகே விஷம் குடித்து பெண் தற்கொலை

நெய்வேலி அருகே விஷம் குடித்து பெண் தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2018-12-20 22:15 GMT
நெய்வேலி, 

நெய்வேலி அருகே உள்ள மேலக்குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் குமார். இவருடைய மனைவி சாந்தி(வயது 38). இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். குமார் கடந்த 1½ ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இதையடுத்து சாந்தி தனது குழந்தைகளுடன் வசித்து வந்தார். இந்த நிலையில் சாந்தி, சிலரிடம் கடன் வாங்கியதாக தெரிகிறது. ஆனால் அந்த தொகையை கடன் வாங்கியவர்களிடம் சாந்தியால் திருப்பி செலுத்த முடியவில்லை. இதனால் மனஉளைச்சலுக்கு ஆளான சாந்தி, சம்பவத்தன்று வீட்டில் இருந்த விஷத்தை எடுத்து குடித்து விட்டார். மயங்கிய நிலையில் கிடந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக பெரியாக்குறிச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்ற சாந்தி, திண்டிவனத்தில் உள்ள உறவினர் வீட்டில் தங்கியிருந்தார்.

இந்த நிலையில் நேற்று அவருக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அவர் சிகிச்சைக்காக திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின்னர் அவர் மேல்சிகிச்சைக்காக விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் சாந்தி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்த புகாரின்பேரில் தெர்மல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்