பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்து தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தஞ்சையில், போக்குவரத்து தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2018-12-21 23:08 GMT
தஞ்சாவூர்,

தஞ்சை கரந்தையில் உள்ள அரசு போக்குவரத்து கழக கோட்ட அலுவலகம் முன்பு தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்கள் சங்க ஏ.ஐ.டி.யூ.சி. சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு மத்திய சங்க துணை தலைவர் அழகிரி தலைமை தாங்கினார். பொதுச் செயலாளர்(பொறுப்பு) தாமரைச்செல்வன், பொருளாளர் சுந்தரபாண்டியன், கோட்ட தலைவர் மாணிக்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தை ஏ.ஐ.டி.யூ.சி. மாவட்ட தலைவர் சேவையா தொடங்கி வைத்து பேசினார்.

மாநில துணை பொதுச் செயலாளர் துரை.மதிவாணன், ஏ.ஐ.டி.யூ.சி. ஓய்வு பெற்றோர் சங்க பொதுச் செயலாளர் அப்பாத்துரை, நுகர்பொருள் வாணிபக்கழக தொழிலாளர் சங்க மாநில பொருளாளர் கோவிந்தராஜன், மத்திய சங்க துணை பொதுச் செயலாளர் சேகர் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர்.

ஆர்ப்பாட்டத்தில், வேலை நிறுத்தத்தை காரணம் காட்டி பணியாளர்கள் இடமாற்றம் செய்யப்பட்டதை ரத்து செய்ய வேண்டும். அனைத்து சேமநல ஓட்டுனர், நடத்துனர்களையும் அவரவர்கள் 240 நாட்கள் பணி முடித்த தேதியில் இருந்து நிரந்தரம் செய்து பணப்பலன்களை வழங்க வேண்டும். பஞ்சப்படி நிலுவை தொகையை உடனே வழங்க வேண்டும்.

கஜா புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களை சேர்ந்த தொழிலாளர்களுக்கு விடுப்பூதிய நிலுவை தொகை, பஸ்கள் இயக்கப்படாத நாட்களுக்கு வருகைப்பதிவு வழங்க வேண்டும். ஆப்சென்ட் போடப்பட்டதை ரத்து செய்ய வேண்டும். ஓய்வு பெற்ற தொழிலாளர் களுக்கு நிலுவையில் உள்ள பணப்பலன்களை உடனே வழங்க வேண்டும். கடந்த 2016-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் வாரிசு பணிக்கு தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு உடனே பணி நியமன ஆணை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

ஆர்ப்பாட்டத்தை ஏ.ஐ.டி.யூ.சி. ஓய்வு பெற்றோர் சங்க தலைவர் மல்லி.தியாகராஜன் முடித்து வைத்து பேசினார். முடிவில் கோட்ட செயலாளர் கஸ்தூரி நன்றி கூறினார்.

மேலும் செய்திகள்