மின்துறையில் ஊழியர்கள் பற்றாக்குறை: ஐ.டி.ஐ. மாணவர்களை பயன்படுத்த வேண்டும் அமைச்சர் கமலக்கண்ணன் அறிவுறுத்தல்
மின்துறையில் ஊழியர்கள் பற்றாக்குறையைப் போக்க மாவட்ட கலெக்டர் அனுமதிபெற்று, ஐ.டி.ஐ. மாணவர்களை பயன்படுத்திகொள்ளவேண்டும் என்று அமைச்சர் கமலக்கண்ணன் அறிவுறுத்தினார்.
காரைக்கால்,
காரைக்கால் மாவட்டத்தில் பல்வேறு மக்கள் நலத்திட்ட செயல்பாடுகள் குறித்து கலெக்டர் அலுவலகத்தில் அமைச்சர் கமலக்கண்ணன் ஆலோசனை நடத்தினார். கலெக்டர் கேசவன், குடிமைப் பொருள் வழங்கல் துறை துணை இயக்குனர் ரேவதி, மின்துறை செயற்பொறியாளர் ராஜேஸ் சன்யால் மற்றும் பல்வேறு அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து, அந்தந்த துறைகள் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் குறித்து அதிகாரிகளிடம் அமைச்சர் கமலக்கண்ணன் கேட்டறிந்தார். தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளை விரைந்து முடிக்குமாறு அறிவுறுத்தினார்.
கூட்டத்தில் அமைச்சர் கமலக்கண்ணன் பேசியதாவது:-
மாணவர்களை பயன்படுத்தலாம்
மாதாந்திர இலவச அரிசிக்கு பதிலாக பணம் வரவு வைக்கப்படும் நிலையில், எத்தனை பேருக்கு, என்ன காரணத்தால் பணம் கிடைக்காமல் உள்ளது. புயல் பாதிப்பு உள்ளிட்ட காரணங்களால் இன்னும் எத்தனை மின்கம்பங்கள் தேவை உள்ளன. எங்கெங்கு தெரு விளக்குகள் புதிதாக பொருத்த வேண்டும் என்ற விவரம் கேட்கப்பட்டு உள்ளது. தேவைகள் அனைத்தையும் எழுத்துப்பூர்வமாக தெரியப்படுத்த வேண்டும். மேலும், மின்துறையில் நிலவும் ஊழியர்கள் பற்றாக்குறைக்கு மாவட்ட கலெக்டர் அனுமதிபெற்று, ஐ.டி.ஐ. மாணவர்களை பயன்படுத்திகொள்ளவேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.