திருவான்மியூரில் பூட்டிய வீட்டுக்குள் கணவன்-மனைவி பிணமாக கிடந்தனர் காதல் திருமணம் செய்தவர்கள்

சென்னை திருவான்மியூரில், காதல் திருமணம் செய்த கணவன்-மனைவி பூட்டிய வீட்டுக்குள் பிணமாக கிடந்தனர்.

Update: 2018-12-23 22:00 GMT
அடையாறு,

சென்னை திருவான்மியூர் திருவள்ளுவர் நகரில் ஒரு வாடகை வீட்டில் வசித்து வந்தவர் கோபி (வயது 28). விழுப்புரத்தை சேர்ந்த இவரும், சென்னையை சேர்ந்த பாண்டிச்செல்வி (23) என்பவரும், திருவான்மியூரில் உள்ள கடையில் வேலை செய்து வந்தபோது காதலித்து, 2 வருடத்துக்கு முன்பு பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர்.

நேற்று காலை முதல் இவர் களின் வீட்டு கதவு திறக்கப் படாமல் பூட்டியே கிடந்தது. இதனால் சந்தேகமடைந்த வீட்டின் உரிமையாளர், நேற்று மாலை ஜன்னல் வழியாக வீட்டின் உள்ளே பார்த்தார். அதில் வீட்டின் உள்ளே கோபி தூக்கில் பிணமாக தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இதுபற்றி திருவான்மியூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற போலீசார், வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அங்கு படுக்கை அறையில் கோபி, தூக்கில் பிணமாக தொங்கினார். படுக்கையில் பாண்டிச்செல்வி இறந்து கிடந்தார்.

போலீசார் 2 பேரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

குடும்பத் தகராறில் கோபி, ஆத்திரத்தில் தனது மனைவியை கொன்றுவிட்டு அதனால் பயந்துபோய் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டாரா? அல்லது தனது மனைவிக்கு விஷம் கொடுத்து கொன்றுவிட்டு, அவர் தூக்கில் தொங்கினாரா? என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

இருவருக்கும் திருமணமாகி 2 வருடங்களே ஆவதால், கணவன்-மனைவி சாவுக்கான காரணம் குறித்து ஆர்.டி.ஓ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.

மேலும் செய்திகள்