விக்கிரவாண்டி அருகே மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த பெண் பலி

விக்கிரவாண்டி அருகே மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த பெண் பரிதாபமாக உயிரிழந்தார்.

Update: 2018-12-23 22:00 GMT
விக்கிரவாண்டி, 

சென்னை பம்பல் கீர்த்திவாசன் தெருவை சேர்ந்தவர் அருள்ராஜ்(வயது 31). இவர் கிறிஸ்துமஸ் பண்டிகையை தனது சொந்த ஊரான தேனியில் கொண்டாட முடிவு செய்தார். அதற்காக தனது மனைவி ரேணிடாவுடன்(24) நேற்று மாலை ஒரு மோட்டார் சைக்கிளில் சென்னையில் இருந்து தேனிக்கு புறப்பட்டார். நேற்று இரவு 8.20 மணியளவில் விக்கிரவாண்டி அடுத்த முண்டியம்பாக்கம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை அருகே வந்து கொண்டிருந்தபோது, சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையை ஒருவர் கடக்க முயன்றார். அப்போது அவர் மீது மோதாமல் இருப்பதற்காக அருள்ராஜ் மோட்டார் சைக்கிளை பிரேக் பிடித்து நிறுத்தினார்.

இதில் நிலைதடுமாறிய அருள்ராஜூம், ரேணிடாவும் தவறி கீழே விழுந்தனர். இதில் தலையில் பலத்த காயமடைந்த ரேணிடா சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார். அருள்ராஜ் படுகாயமடைந்தார். இவரை அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் மீட்டு சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையே இதுபற்றி தகவல் அறிந்த விக்கிரவாண்டி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விபத்தில் பலியான ரேணிடாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்