ஸ்ரீபெரும்புதூர் அருகே லாரி சக்கரத்தில் சிக்கி தனியார் நிறுவன ஊழியர் பலி

ஸ்ரீபெரும்புதூர் அருகே மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதியதில் தனியார் நிறுவன ஊழியர், லாரி சக்கரத்தில் சிக்கி பரிதாபமாக இறந்தார்.

Update: 2018-12-24 22:00 GMT
ஸ்ரீபெரும்புதூர்,

ஸ்ரீபெரும்புதூரை அடுத்த எச்சூர் மாதா கோவில் தெருவைச் சேர்ந்தவர் அருளானந்தம் (வயது 50). இவர், ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை செய்து வந்தார். நேற்று மாலை சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் அருளானந்தம் மோட்டார் சைக்கிளில் சென்றார்.

அப்போது அவருக்கு பின்னால் சென்னை நோக்கி வந்த லாரி, இவரது மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது. இதில் நிலைதடுமாறி கீழே விழுந்த அருளானந்தம் மீது லாரி சக்கரம் ஏறி இறங்கியது. இதில் அவர், உடல் நசுங்கி அதே இடத்தில் பரிதாபமாக இறந்தார்.

விபத்து நடந்த உடன் லாரியை அதே இடத்தில் நிறுத்திவிட்டு டிரைவர் தப்பி ஓடிவிட்டார். அப்போது அந்த லாரிக்கு பின்னால் வந்த இரண்டு கார்கள், அடுத்தடுத்து ஒன்றன்பின் ஒன்றாக லாரியில் மோதி விபத்துக்குள்ளானது.

இதில் இரண்டு கார்களிலும் வந்தவர்கள் சிறு காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்கள். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதுபற்றி தகவல் அறிந்துவந்த ஸ்ரீபெரும்புதூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் விநாயகம், பலியான அருளானந்தம் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீபெரும்புதூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தார். இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய லாரி டிரைவரை தேடி வருகின்றனர்.

பலியான அருளானந்தத்துக்கு சாவித்திரி என்ற மனைவியும், 2 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர்.

மேலும் செய்திகள்