ஆண்டிமடம் அருகே தொழிலாளி சாவில் மர்மம் இருப்பதாக கூறி பொதுமக்கள் மறியல் போக்குவரத்து பாதிப்பு

ஆண்டிமடம் அருகே தொழிலாளி சாவில் மர்மம் இருப்பதாக கூறி பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Update: 2018-12-24 22:44 GMT
வரதராஜன்பேட்டை,

அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் அருகே பெரியாத்துக்குறிச்சி கிராமத்தை சேர்ந்தவர் கோவிந்தசாமி(வயது29). கூலி தொழிலாளியான இவர் நேற்று முன்தினம் இரவு விருத்தாச்சலம்- ஆண்டிமடம் ரோட்டில் ராங்கியம் அருகே சாலையோரம் நடந்து சென்றார். அப்போது அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதி, கோவிந்தசாமி படுகாயம் அடைந்தார். அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த கோவிந்தசாமி நேற்று மாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து கோவிந்தசாமியின் தந்தை பரமசிவம் ஆண்டிமடம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் கோவிந்தசாமி சாவில் மர்மம் இருப்பதாக கூறி அவரது உறவினர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் ஒன்று திரண்டு ஆண்டிமடம்- விருத்தாச்சலம் மெயின்ரோட்டில் பெரியாத்தக்குறிச்சி கிராமத்தில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த ஆண்டிமடம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கார்த்திக் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது போலீசார் கூறுகையில், இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தனர். இதனை ஏற்றுக்கொண்ட பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த சாலை மறியல் போராட்டத்தால் ஆண்டிமடம்- விருத்தாச்சலம் சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மேலும் செய்திகள்