வாடிப்பட்டி அருகே மனைவியை கொன்று இளநீர் வியாபாரி தற்கொலை

வாடிப்பட்டி அருகே அம்மிக்கல்லை தலையில் போட்டு மனைவியை கொன்றுவிட்டு வியாபாரி தற்கொலை செய்துகொண்டார்.

Update: 2018-12-25 22:15 GMT
வாடிப்பட்டி,

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே அய்யங்கோட்டை கிராமம் உள்ளது. இங்குள்ள அய்யனார் கோவில் தெருவை சேர்ந்தவர் முருகன்(வயது 52). இவர் அப்பகுதியில் இளநீர் வியாபாரம் செய்து வந்தார். அவருடைய மனைவி பாலாமணி. இவர் பஸ் நிறுத்தம் முன்பு டீக்கடை நடத்தி வந்தார். இவர்களுக்கு திவ்யா என்ற மகளும், வீரகுரு என்ற மகனும் உள்ளனர்.

திவ்யாவுக்கு கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் ஆனது. வீரகுரு மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் இளங்கலை முதலாம் ஆண்டு படித்து வருகிறார்.

முருகனுக்கு கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு நிகழ்ந்த சாலை விபத்தில் வலது கால் துண்டானது. இதனால் செயற்கை கால் பொருத்தி இருந்தார். இந்த நிலையில் சமீப காலமாக முருகன், பாலாமணி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.

தந்தை-தாய் இடையே ஏற்படும் தகராறு காரணமாக மகன் வீரகுரு வீட்டில் தங்காமல் நண்பர்கள் வீடுகளில் தங்கி வந்ததாக கூறப்படுகிறது.

இந்தநிலையில் நேற்று காலை வீரகுரு தனது வீட்டிற்கு சென்று பார்த்தபோது அவர் கண்ட காட்சி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. உள் அறையில் பாலாமணி தலையில் அம்மிக்கல்லை போடப்பட்டு பலத்த காயத்துடன் பிணமாக கிடந்தார். மற்றொரு அறையில் முருகன் மின்விசிறியில் தூக்கில் பிணமாக தொங்கியவாறு கிடந்தார். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த வீரகுரு, உடனடியாக வாடிப்பட்டி போலீசாருக்கு தகவல் கொடுத்தார்.

அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரெஜினா மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினார்கள். முருகன், பாலாமணி ஆகியோரது உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வாடிப்பட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

போலீசார் விசாரணையில், முருகன் தனது மனைவி பாலாமணியின் தலையில் அம்மிக்கல்லை போட்டு கொலை செய்துவிட்டு, தானும் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. எதற்காக அவர் இந்த வெறிச்செயலில் ஈடுபட்டார்? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்