பெண்ணுக்கு வரதட்சணை கொடுமை - கணவர் கைது; 3 பேர் மீது வழக்கு

பெண்ணிடம் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்திய கணவரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2018-12-25 23:00 GMT
திருவண்ணாமலை,

பெண்ணிடம் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்திய கணவரை போலீசார் கைது செய்தனர். மேலும் மாமனார், மாமியார் உள்பட 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கீழ்பென்னாத்தூர் தாலுகா கோணலூர் சூரியந்தாங்கல் கிராமத்தை சேர்ந்தவர் நாவப்பன். இவரது மகன் மணிகண்டன் (வயது 28). இவருக்கும் திருவண்ணாமலை பறையம்பட்டு எலிகுத்தியை சேர்ந்த கவுசல்யா (21) என்பவருக்கும் கடந்த ஏப்ரல் மாதம் 25-ந் தேதி திருமணம் நடைபெற்றது.

இவர்களுக்கு திருமணமான ஒரு மாதத்தில் இருந்தே மணிகண்டன் அவரது மனைவி கவுசல்யாவிடம் 50 பவுன் நகை வரதட்சணையாக கேட்டு கொடுமை செய்து வந்ததாக கூறப்படுகிறது. இதற்கு மணிகண்டனின் தந்தை நாவப்பன், தாய் முனியம்மாள், அக்காள் சத்யா ஆகியோர் உடந்தையாக இருந்து உள்ளனர்.

மேலும் மணிகண்டனுக்கு 2-வது திருமணம் நடத்தி வைக்கவும் அவரது பெற்றோர் முயற்சிகள் மேற்கொண்டு உள்ளனர். இதனால் மனவேதனை அடைந்த கவுசல்யா கடந்த சில நாட்களுக்கு முன்பு விஷம் குடித்து தற்கொலை செய்து கொள்ள முயன்றார். பின்னர் அவர் திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்றார்.

பின்னர் இதுகுறித்து அவர் திருவண்ணாமலை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் மனு அளித்தார். இந்த புகார் மனு குறித்து திருவண்ணாமலை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் விசாரணை நடத்தப்பட்டது.

இதையடுத்து கவுசல்யாவின் கணவர் மணிகண்டன், மாமனார் நாவப்பன், மாமியார் முனியம்மாள், நாத்தனார் சத்யா ஆகியோர் மீது போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மீனாட்சி வழக்குப்பதிவு செய்து மணிகண்டனை கைது செய்தார்.

மேலும் செய்திகள்